"ராஜதந்திரம்".. சரசரவென கிளம்பி போன உதயநிதி.. அழகிரியை பார்த்தது இதுக்குத்தான்! ஆஹா ட்விஸ்ட்
மதுரை: மதுரையில் மு க அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென சந்தித்தது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை மாட்டு பொங்கல் அன்று மதுரையில் சந்தித்தார். மதுரையில் இருக்கும் வீட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் இந்த சந்திப்பை திடீரென நிகழ்த்தியது விவாதங்களை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக இப்படி அழகிரியை போய் நேரில் பார்க்கிறார். அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு தயா அழகிரி வந்திருந்த நிலையில் அழகிரியை உதயநிதி பார்க்க முடியவில்லை. இதனால் மரியாதை நிமித்தமாகவே அழகிரியை உதயநிதி பார்த்ததாக கூறப்படுகிறது.
மிஸ் பண்ணாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
சந்திப்பு
விழா நாட்களுக்கு இவர்கள் போனில் மாறி மாறி வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை நேரடியாகவே வாழ்த்து சொல்லிவிடலாம் என்றுதான் உதயநிதி வந்ததாக கூறப்படுகிறது. அதெல்லாம் போக அழகிரிக்கு லேசாக உடல்நிலை சரியில்லை, அவருக்கு கொஞ்சம் மன வருத்தமும் இருந்தது. அதனால்தான் உதயநிதி வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார் என்கிறார்கள். இது அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துமா? அழகிரி மீண்டும் எழுச்சி பெற இது வழி வகுக்குமா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுகின்றன. ஆனால் இது முழுக்க முழுக்க குடும்ப ரீதியான சந்திப்புதான் அரசியல் ரீதியாக இது எந்த விதமான மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றேதான் திமுக தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.
சந்திப்பில் என்ன நடந்தது?
இந்த சந்திப்பில் அழகிரியை நேற்று பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் அப்படியே காலில் விழுந்தார். அழகிரியின் மனைவி காந்தி அழகிரி உதயநிதியை அருகில் அழைத்து அவரின் நெற்றியில் முத்தம் கொடுத்து வீட்டிற்குள் வரவேற்றார். அமைச்சராக முதல்முறை உதயநிதி வீட்டிற்கு வருவதால் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. குடும்ப அளவில் இந்த சந்திப்பு இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அரசியல் வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி
அவர் அளித்த பேட்டியில், இந்த சந்திப்பில் பெரிய விசேஷம் இல்லை. 2011 தேர்தலில் திமுக தோற்றபின் அழகிரியின் அரசியல் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. கடந்த 7-8 வருஷமாக அழகிரி அரசியலில் ஆக்டிவாக இல்லை. அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்றால் என்னுடைய நேரடி பதில் இல்லை. திமுகவில் அவர் மீண்டும் வருவாரா என்பதும் சந்தேகம்தான். அவருக்கு வயது 72 ஆகிவிட்டது. இதற்கு மேல் ஆக்டிவ் அரசியல் செய்ய அவர் விரும்ப மாட்டார். அவர் வேண்டுமானால் தனது மகன் துரைதயாநிதிக்கு இடம் கேட்க வாய்ப்பு உள்ளது.
பெரிய விசேஷம்
உதயநிதி - துரை தயாநிதி ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறார்கள். இவர்கள் ஒன்றாக பணிகளை செய்கிறார்கள். நெருக்கமாக இருக்கிறார்கள். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மீது உதயநிதியால் தற்போது கவனம் செலுத்த முடியவில்லை. இந்த ரெட் ஜெயிண்ட் மூவை சமயங்களில் கிருத்திகா உதயநிதி நடத்தலாம். அல்லது துரை தயாநிதி நடத்தலாம். இந்த சந்திப்பை அரசியல் சந்திப்பாக நாம் பார்க்க வேண்டியதை விட நல்ல குடும்ப சந்திப்பாக பார்க்கலாம். அழகிரி மீண்டும் அரசியலுக்கு திரும்ப வர வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.
துரை தயாநிதி
ஒரு காலத்தில் அழகிரி ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தார். ஸ்டாலின் திமுக தலைவர் ஆக கூடாது என்று சொன்னார். தேர்தலுக்கு முன்பு கூட ஸ்டாலின் முதல்வராவதை அழகிரி சூசகமாக எதிர்த்தார். இப்போது அழகிரி மாறிவிட்டார். அழகிரி மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்புகள் இல்லை. அவர் மீண்டும் தென் மண்டலத்தில் கோலோச்ச நினைத்தால், மீண்டும் தென் மண்டலத்தில் தன்னுடைய ஆட்களுக்கு பதவி கொடுக்க கேட்டால் அதை ஸ்டாலின் முதலிலேயே தவிர்த்துவிடுவார் என்று நினைக்கிறன். மற்றபடி அழகிரி வேண்டுமானால் தனது மகன் துரைதயாநிதிக்கு இடம் கேட்க வாய்ப்பு உள்ளது.
ஸ்டாலினுக்கு தெரியுமா?
ஸ்டாலினுக்கு தெரியாமல் இந்த மீட்டிங் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை. முன்பு பிரிந்து இருந்தார்கள். இப்போது சேர்ந்துவிட்டார் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்காக அழகிரி மீண்டும் அரசியலுக்கு வருவார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை. 72 வயதில் மீண்டும் அழகிரி ஆக்டிவ் அரசியலுக்கு வர சான்ஸ் குறைவு. வெட்டப்பட்டது மீண்டும் துளிராது. துரைதயாநிதிக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கொடுக்கலாம். அதுவும் கூட துரைதயாநிதி சகோதர சண்டை போட கூடாது என்பதை உணர்ந்து கொண்டால் நடக்கும்.
முக்கியமான நிகழ்வு
அழகிரியை உதயநிதி சந்தித்தது முக்கியமான நிகழ்வு என்கிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போது நாம் எதையும் கற்பனை செய்ய முடியாது. எனக்கு தெரிந்த வரை துரைதயாநிதிக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அரசியல் மோதல் இருக்க கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வாய்ப்பு கொடுக்கலாம். அல்லது ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை நடத்த மட்டும் வாய்ப்பு கொடுக்கலாம். உதயநிதி செய்தது ராஜாங்க மூவ். உதயநிதி எல்லோரையும் அரவணைத்து ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளார். அவர்கள் வீட்டில் பெரியவர்கள் சண்டை போட்டாலும், அடுத்த தலைமுறையினர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்., என்று குறிப்பிட்டுள்ளார்.