"நாங்க ஏன் லீவு போடணும்".. தடுத்த ஜாதி அமைப்பினரை கேள்வியால் விரட்டிய மதுரை அரசு பள்ளி மாணவிகள்!
மதுரை: பள்ளியின் பெயரில் உள்ள ஜாதி பெயரை அகற்றும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வேளையில், மதுரை அருகே உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்த ஜாதி அமைப்பை சேர்ந்தவர்களை மாணவிகள் கேள்வி கேட்டு விரட்டிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் சில இடங்களில் உள்ள பள்ளிகளில் ஜாதி பெயர்கள் உள்ளன. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பல இடங்களில் அரசு கள்ளர் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தனர். அதாவது பள்ளியின் பெயரில் உள்ள கள்ளர் என்பதை நீக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு மாணவ-மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். அதன்படி இன்று அரசு கள்ளர் பள்ளிகள் முன்பு அவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டத்தில் கள்ளர் பள்ளிகளுக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் திரும்ப அனுப்பினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அ.பூச்சிப்பட்டி எனும் கிராமத்திலும் சிலர் பள்ளி முன்பு நின்று, இன்று பள்ளிக்கு விடுமுறை எனக்கூறி மாணவிகளை வீட்டுக்கும் செல்லும்படி கூறினர். அதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவிகள் தங்களின் கேள்வியால் போராட்டக்காரர்களை அங்கிருந்து ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் மாணவிகள் பள்ளி செல்ல ஆர்வமாக உள்ளனர். ஆனால் சிலர் மாணவிகளை தடுத்து வீட்டுக்கு செல்லும்படி கூறுகின்றனர். அப்போது ஒருவர், ‛‛நீங்கள் ஓசியில் படிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் மல்லுக்கட்டி வருகிறோம்'' என்றார். அதற்கு மாணவிகள், ‛‛இப்போது யார் எங்களை பணம் கட்ட சொன்னார்கள்'' என பதில் கேள்வி கேட்கின்றனர். அதற்கு அங்கிருந்தவர்கள், ‛‛அரசாங்கம் தான் பணம் கட்ட சொல்லி இருக்குமா.. நீங்கள் பணம் கட்டி தான் படிக்க வேண்டும் என்று ஜிஓ போடப்பட்டுள்ளது'' என்றார்.
ஆனால் அதனை மாணவிகள் நம்பவில்லை. மாறாக, மாணவி ஒருவர், ‛‛ப்ரூப் எங்க வந்து இருக்கு?'' என கேட்கிறார். அதற்கு அவர், ‛‛ப்ரூப் இருக்கு படிச்சி பார்க்கிறியா? உங்கள் டீச்சர்ட்ட கூட கேட்டுக்கோ'' என சொல்ல, அந்த மாணவி ஒருவர், ‛‛எங்கள் டீச்சர் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. நாங்களும் தினமும் செய்தி பார்க்கிறோம். அதில் எதுவும் வரவில்லை. நாங்கள் ஏன் இன்று லீவு எடுக்க வேண்டும்'' எனக்கூறிவிட்டு பள்ளியை நோக்கி ஆர்வமாக செல்கின்றனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுக்கும் வகையில் நின்றதால் அவர்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்த வேளையில் அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி மாணவிகளை பள்ளிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் மாணவிகளை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications