பிரென்ட்ஸ் ஆப் போலீஸில் இணைந்து கொள்ளை நுணுக்கங்களை கற்று.. பிரபல கொள்ளையனாக மாறிய இளைஞர்
மதுரை: லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பிரென்ட்ஸ் ஆப் போலீசாக பணியில் சேர்ந்து பிரபல கொள்ளையனாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட கருப்பாயூரணி, ஒத்தக்கடை, மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக ஆட்கள் இல்லாத வீடுகளை உடைத்து நகை பணத்தினை கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் நடைபெற்றுவந்தது.
இதனையடுத்து கொள்ளையர்களை கைது செய்வதற்காக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ஒத்தக்கடை பகுதிகள்
இந்த விசாரணையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி மற்றும் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும், நெல்லை மாவட்டத்தில் பதிவாகியிருந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழ்குமரன் மற்றும் லோகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள்
இதனையடுத்து கொள்ளையா்களை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படையினர் பிரபல கொள்ளையர்களான வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளியான தமிழ்குமரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள் மற்றும் கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளை வழக்கு
மதுரையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையனான மணிகண்டன் வேலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரென்ட்ஸ் ஆப் போலீஸாக காவல்துறையில் பணிபுரிந்து காவல்துறையினருடன் பழகி பல்வேறு கொள்ளையர்களின் கொள்ளையடிக்கும் முறைகளை தெரிந்து கொண்டார்.

கொள்ளையன்
அதனை பயன்படுத்தி ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் வேலையை விட்டுவிட்டு கொள்ளையனாக மாறி இருவரை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இரு சக்கர வாகனத்திலேயே சென்று புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு சாவி மற்றும் பீரோ சாவிகளை வைக்கும் இடத்தை கண்டறிந்தும், பூட்டுகளை உடைத்தும் 10 நிமிடங்களில் கொள்ளை சம்பவத்தை நடத்தி முடிக்கும் அளவிற்கு கைதேர்ந்த பிரபல கொள்ளையனாக மாறியுள்ளார் மணிகண்டன்.

100 கொள்ளை வழக்குகள்
மேலும் கொள்ளையடிக்க செல்லும் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு பெண்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டி மாடல் இரு சக்கர வாகனத்தை பறித்து அதனுடைய பதிவெண்ணை மாற்றி சாதாரண நபர்கள் போல பல்வேறு மாவட்டங்களுக்கு இரு சக்கர வாகனத்திலேயே பயணித்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதும் பிரபல கொள்ளையான மணிகண்டன் மீது இரு கொலை வழக்கு உள்ளிட்ட 100 கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மணிகண்டன் கைது
பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டனை கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசுகையில் பிரபல கொள்ளையன் வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான லோகேஷ் என்பவனை தனிப்படையினர் தேடி வருகிறோம்.

உரிய தண்டனை
மணிகண்டனின் மற்ற வழக்குகளில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி கொள்ளையர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக வழக்கை விரைவாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்று தருவோம் எனவும் தெரிவித்தனர். மேலும் அதிக நகைகளை பயன்படுத்துபவர்கள் வங்கி லாக்கர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications