சாதி மறுப்புத் திருமணம்... வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து... பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்!
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தங்கையின் வளைகாப்பு விழாவிற்கு வந்த அண்ணன் விழாவிற்கு வந்த உறவினர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
சாதிமறுப்பு திருமணம் செய்த தங்கையின் வளைகாப்பு விழா பத்திரிகையில் அவரது குடும்பத்தாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. பத்திரிகையில் பெண்வீட்டார் பெயர் இருந்ததால் கத்தியுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அண்ணன் அங்கிருந்த உறவினர் ஒருவரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறிமுக போட்டியிலேயே சதம்.. கங்குலி, சேவாக் வரிசையில் இடம்பிடித்த.. சபாஷ் ஷ்ரேயாஸ்!
சாதி மறுப்புத் திருமணம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி பழையபாப்பன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரும், அதே பகுதியில் வசித்து வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கவுசிகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கர்ணனும், கவுசிகாவும் 10 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி, இங்கிருந்தால் பிரச்சனைகள் அடிக்கடி வரும் என கருதி கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்தனர்.
பெண்ணிற்கு சீமந்தம்
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய நிலையில் பெற்றோருக்கு ஓரளவு கோபம் தணிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்போடு மீண்டும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பெரியநார் நகருக்கு இடம் பெயர்ந்தனர். கர்ப்பிணியான மனைவி கவுசிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை கணவர் கர்ணன் செய்துவந்தார். இதற்காக பத்திரிகை அச்சடித்து உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். பின்னர் நிச்சயித்தபடி நேற்று விருத்தாசலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுசிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவுசிகாவை ஆசீர்வாதம் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர்.
தங்கை, மச்சானிடம் தகராறு
அப்போது அங்கு ஆத்திரமாக வந்த கவுசிகாவின் அண்ணன் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துவிட்டு எதற்காக வளைகாப்பு நிகழ்ச்சி பத்திரிகையில் அவர்கள் பெயர் அச்சடித்தாய் என கேட்டார். இதனால் மண்டபத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சமரசம் செய்தவருக்கு நேர்ந்த கதி
பிரச்சனை பெரிதாக சிலர் வேடிக்கை பார்க்க பக்கத்து ஊரை சேர்ந்த சிலம்பரன் என்பவர் மட்டும் குறுக்கே வந்து சண்டை போடாதீர்கள் என விலக்கிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிலம்பரசனை குத்தினார். இதில் காயம் அடைந்த சிலம்பரசன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.