56-ம் நாள் கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் 'சித்து’-இன்று முதல் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வருமா?
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 56-வது நாளாக கன்னட விவசாயிகள் போராட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். இதனால் இன்று முதல் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டிய வினாடிக்கு 2,600 கன அடி காவிரி நீர் திறந்துவிடப்படுமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு முதலில் 5,000 கன அடி நீர், பின்னர் 3,000 கன அடிநீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் சொற்ப நீரையே கர்நாடகா திறந்துவிட்டது.

விவசாயிகள் போராட்டத்தில் சித்தராமையா: தமிழ்நாட்டுக்கு சொற்ப நீரையும் தரக் கூடாது; ஒரு சொட்டு நீரையும் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கர்நாடகா விவசாயிகள் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 56-வது நாளாக தொடர்ந்தது. மண்டியா பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநில முதல்வர் சித்தராமையா, விவசாயிகளின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
சித்தராமையா பேச்சு: பின்னர் போராடும் விவசாயிகளிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நான் ஒரு விவசாயி மகன். விவசாயிகளி துயரம் எனக்கு தெரியும். விவசாயிகளின் நலனை அதிகார பலனை அனுபவிக்க பலியிடமாட்டேன். விவசாயிகளுக்கு எதிராக அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கமாட்டோம். எங்களுக்கு அரசு அதிகாரம் என்பதை விட மக்கள், விவசாயிகள் நலனே முக்கியம் என்றார்.

டிகே சிவகுமார் பிடிவாதம்: இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இன்று முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை. ஆனால் இதனை ஏற்கவே முடியாது; தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கமாட்டோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
துரைமுருகன் கண்டனம்: இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடகாவின் இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை; ஏதோ அண்டை நாட்டுடன் மல்லுக்கட்டுவதைப் போல கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் நடந்து கொள்கின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 2,600 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications