ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்த மர்ம பொருள்! கர்நாடகா மங்களூரில் திடீர் பரபரப்பு.. நடந்தது என்ன!
மங்களூரு: கர்நாடகாவின் கடற்கரை நகரமான மங்களூரில் திடீரென வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடற்கரை ஓட்டியுள்ள மாவட்டங்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.
இந்தச் சூழலில் கர்நாடகாவின் கடற்கரை நகரமான மங்களூரில் வாகனம் ஒன்று திடீரென மர்மமான முறையில் வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணி துடித்தபோதும்.. நிற்காமல் சென்ற கடற்படை வாகனம்.. மடக்கிபிடித்த மக்கள்.. ஆவேசமான வீரர்கள்
வெடித்துச் சிதறியது
கர்நாடகாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் நேற்று ஒரு ஆட்டோஷா திடீரென வெடித்துச் சிதறியது. இது எப்படி வெடித்துச் சிதறியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தில் ஓட்டுநரும் பயணி ஒருவரும் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் அமைதியாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பீதியடைய வேண்டாம்
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மங்களூரு காவல்துறை அதிகாரி என் சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போது தான் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். எனவே, இப்போதே என்ன காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாங்கள் விசாரித்து வருகிறோம். அதற்குள்ள மக்கள் எந்தவொரு முன்முடிவுக்கும் வர வேண்டாம்.
போலீசார் உறுதி
ஓட்டுநர் தீயைக் கண்டதாக்கத் தெரிவித்தார். காயமடைந்த ஓட்டுநரும் பயணியும் இப்போது சிகிச்சையில் உள்ளனர்.. அவர்களால் இப்போது பேச முடியவில்லை. பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம். காயமடைந்தவர்கள் பேசக் கூடிய நிலைக்கு வந்ததும், நிச்சயம் அவர்களிடம் விசாரணை நடத்தி என்ன நடந்தது எனச் சொல்கிறோம்" என்றார்.
சிசிடிவி காட்சிகள்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கூட வெளியாகி உள்ளது. அதில் சாலையோரம் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் அருகே ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறுவது தெளிவாகப் பதிவாகி உள்ளது. ஆட்டோவில் சென்ற பயணி ஒருவர், பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றதாகவும், அது தீப்பிடித்தாலேயே தீ ஒட்டுமொத்த வாகனத்திலும் பரவியதாகவும் கூறப்படுகிறது.
வெடித்து சிதறிய குக்கர்?
அந்த பயணி கொண்டு வந்த பையில் இருந்த குக்கரில் இருந்தே தீ பரவியதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல தடயவியல் குழு அந்த இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பரபரப்பு
முன்னதாக கடந்த மாதம் தான் தமிழ்நாட்டில் கோவையில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற கார் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கோவையில் போலீசார் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஓய்வதற்குள்ள, மீண்டும் இப்போது கர்நாடகாவில் ஆட்டோ வெடித்துச் சிதறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.