சிவசேனா ஆட்சி அமைக்க 175 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது.. சஞ்சய் ராவத் அடுத்த அதிரடி
மும்பை: சிவசேனா ஆட்சி அமைக்க 175 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராதவ் அடுத்த அதிரடியை களமிறக்கி இருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக-சிவசேனா இடையேயான இழுபறி தொடருகிறது. இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமையவில்லை.

சமமான அதிகாரம்
சிவசேனா முன்வைக்கும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட சரிசமமான அதிகாரப் பகிர்வை பாஜக ஏற்கவில்லை. அதிகபட்சமாக துணை முதல்வர் பதவி ப்ளஸ் 13 அமைச்சர் பதவி என்கிற அளவுக்கு பாஜக தயாராக இருக்கிறது.

பவாருடன் சந்திப்பு
ஆனால் சிவசேனா இதை முற்று முழுதாக நிராகரிக்கிறது. அத்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசியும் பரபரப்பை கிளப்பினார்.

சஞ்சய் ராவத் அதிரடி
அதேபோல் சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் முதல்வர்; எங்களால் பாஜக இல்லாமலேயே ஆட்சியும் அமைக்க முடியும் எனவும் சஞ்சய் ராவத் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னொரு பக்கம் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் சிவசேனா உடன் இணைந்து ஆட்சி அமைக்கலாமா என்பதில் குழப்பம் இருந்து வருகிறது.

காங்கிரஸில் குழப்பம்
அக்கட்சிகளில் மக்கள் எதிர்க்கட்சியாக அமரத்தான் வாக்களித்திருக்கிறார்கள்; ஆகையால் சிவசேனாவுடன் கை கோர்க்க வேண்டாம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. காங்கிரஸின் சஞ்சய் நிரூபம், சுஷில் குமார் ஷிண்டே போன்றோர், பாஜகவும் சிவசேனாவும் நாடகமாடுகின்றன. அவர்களது ஆட்டத்தில் காங்கிரஸ் தலையை கொடுத்துவிடக் கூடாது என எச்சரிக்கின்றனர்.

சோனியாவை சந்திக்கும் பவார்
மேலும் காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த நிலையில் சஞ்சய் ராவத் மற்றொரு அதிரடியை வீசியுள்ளார்.

எங்களுக்கு 175 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், சிவசேனா ஆட்சி அமைக்க 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இது 175 ஆகவும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என கூறியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications