பயங்கர அடி.. ஒரே நாளில் அதானி குழுமத்துக்கு ரூ.20,400 கோடி இழப்பு! ஹிண்டன்பர்க் அறிக்கையால் வினை!
மும்பை: ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம், இன்று மிகக் கடுமையான பங்கு சரிவைச் சந்தித்தது. இன்று வர்த்தக முடிவில் அதானி குழுமத்திற்கு 2.4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் இந்திய மதிப்பில் ரூ. 20,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான 'செபி'யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பங்குகளை வைத்திருந்தனர், மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் எனக் குற்றம்சாட்டியது.

இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'செபி'யின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மறுத்தது.
அதேபோல், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை. ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது' என்று தெரிவித்துனர்.

அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மாதபி புரி புச் மீதான ஹிண்டன்பர்க்கின் பகீர் குற்றச்சாட்டுகள் எதிரொலியாக, வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் இன்று சரிவைச் சந்தித்தன.
இன்று வர்த்தக முடிவில் அதானி குழுமம் பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இன்று வர்த்தக முடிவில் அதானி குழுமத்திற்கு 2.43 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, இன்று ஒரே நாளில் அதானி குழுமத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 20,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் 1.1% சரிந்துள்ளன. அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் 0.6 % முதல் 4.2 % வரை சரிவுடன் இன்று வர்த்தகமாகின. அதானி கிரீன் மட்டுமே 1 சதவிகிதம் உயர்ந்தது.
கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்து, ஹிண்டன்பர்க் அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அப்போது அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications