தாக்கரேவிற்கு 6 எம்பிக்கள் ‘குட்பை'.. இரவோடு இரவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஏக்நாத் ஷிண்டே! போச்சே
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சியை பறித்த ஏக்நாத் ஷிண்டே தற்போது 6 லோக்சபா எம்பியை தன் கட்சிக்கு இழுத்துள்ளார். உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 6 அதிருப்தி எம்பிக்கள் லோக்சபாவில் தங்களின் இருக்கையை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி எம்பிக்களின் இருக்கையுடன் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ரகசியமாக நடந்த இந்த சதித்திட்டத்த்தில் உத்தவ் தாக்கரேவை, அவரது 6 எம்பிக்களும், ஏக்நாத் ஷிண்டேவும் ஏமாற்றியது எப்படி? எப்படி அவர்கள் அணி மாறினர்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.


மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. கடந்த 2022ம் ஆண்டில் சிவசேனா 2 அணியாக பிரிந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவிற்கு ஆதரவாக சென்றனர். அதோடு சிவசேனா கட்சியையும் ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றினார்.
கட்சியை இழந்த உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணிக்கு மொத்தம் 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். லோக்சபாவில் 9 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 2 எம்பிக்களும் உள்ளனர்.
இதற்கிடையே தான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது லோக்சபாவில் உத்தவ் தாக்கரேவிற்கு உள்ள 9 எம்பிக்களில் 6 பேர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் பெயர்கள் சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பால்கர், பாவுசாகேப் வகாசவ்ரே, நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் மற்றும் சஞ்சய் தினா பாட்டீல் என்பதாகும்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவில் தான் இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகு அவர்கள் ஒவ்வொருவரும் ரகசியமாக தனித்தனி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளனர். இன்று உத்தவ் தாக்கரே எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் அவர்கள் ரகசியமாக டெல்லி சென்றுள்ளனர்.
இவர்கள் டெல்லி சென்றபோது ஏக்நாத் ஷிண்டே மும்பையில் இருந்தார். அவர் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், லோக்சபா எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே அதிகாலை 4.30 மணியளல் புனேவில் இருந்து டெல்லி சென்றுள்ளார். பிறகு அவர்கள் டெல்லியில் ரகசிய மீட்டிங் நடத்தினர். பிறகு அனைத்து எம்பிக்களும் நொய்டாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் இன்று டெல்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் ஓம்ராஜே நிம்பால்கர் (உத்தவ் தாக்கரே அணியின் அதிருப்தி எம்பி)ஆகியோர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பேசினர். அதன்பிறகு பிற , மற்ற ஐந்து எம்பிக்களும் சபாநாயகரைச் சந்தித்து ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். அதில், தாங்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைவதாகவும், நாடாளுமன்றத்தில் தங்களின் இருக்கைகளை மாற்றி அமைக்குமாறும் கோரியுள்ளனர். இதன்மூலம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியில் பிளவு உறுதியாகி உள்ளது.
இவர்கள் தற்போது உத்தவ் தாக்கரேவின் கூட்டத்தை புறக்கணித்துள்ளது மட்டுமின்றி அதற்கு முன்பாக அவரது மகன் ஆதித்ய தாக்கரேவின் பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்து இருந்தனர். இதனால் அப்போதே இந்த 6 எம்பிக்களும் பாஜக அல்லது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம் எனறு கூறப்பட்டது. அது தற்போது உறுதியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஆதரவை எடுத்துள்ளனர்.
லோக்சபாவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணிக்கு 9 எம்பிக்கள் உள்ளனர். இதில் 6 பேர் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர். இது கட்சியின் மொத்த எம்பிக்களில் 3ல் 2 பங்காகும். பொதுவாக 3ல் 2 பங்கு எம்பிக்கள் தனி அணியாக செயல்படும்போது கட்சி தலைமையால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனை இந்த எம்பிக்கள் சாதகமாக்கி அணி மாறி உள்ளனர்.
மேலும் இந்த 6 எம்பிக்களும் உத்தவ் தாக்கரேவின் (யுபிடி) அணியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பக்கம் சாய முக்கிய காரணமாக ஒரு விஷயத்தை சொல்லி உள்ளனர். அதில், ''சிவசேனா கட்சியின் கொள்கையில் இருந்து சிவசேனா (யுபிடி) அணியின் தலைமை (உத்தவ் தாக்கரே) விலகி செல்கிறது. கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்'' என்று கூறியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் 55 எம்எல்ஏக்களில் 40 பேருடன் ஏக்நாத் ஷிண்டே தனி அணியாக பிரிந்தார். அப்போதும் அவர் சொன்ன கருத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா தனது கொள்கையை மாற்றி வருகிறது. இதனால் பாஜகவுடன் கைகோர்ப்பதாக கூறி சென்றார். தற்போது அதிருப்தி எம்பிக்களும் அதையே கூறி உள்ளனர். இது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணிக்கு விழுந்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications