தெலுங்கு சினிமாவை மிஞ்சிய சீன்! 6 km அணி வகுத்த 600 கார்கள்.. மகாராஷ்டிராவை மிரள விட்ட கேசிஆர்
மும்பை: தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்துள்ளார். சாலை மார்க்கமாக அவர் பயணித்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் சுமார் 600 கார்களில் அவரை பின்தொடர்ந்தனர். இந்த காட்சி தெலுங்கு படத்தின் சீனையே மிஞ்சும் அளவுக்கு இருந்திருக்கிறது.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சந்திக்க இருக்கிறார். சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகத்தை வகுத்தன. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தாலும் இதிலும் பல சிக்கல்கள் மேலெழுந்தன.

டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதில் காங்கிரஸ் அமைதி காத்தது. காங்கிரஸ் இதில் மவுனம் கலைக்க வேண்டும், அப்படி கலைத்தால்தான் அடுத்து நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அதேபோல மமதா பானர்ஜியும் காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முயன்று வருகிறது. பாட்னா கூட்டத்தில் மாயாவதி பங்கேற்கவில்லை. குறிப்பாக இந்த கூட்டத்திற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக உத்தவ் தாக்கரேவை, சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் மகாராஷ்டிரா சென்றிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கேசிஆரின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த மே மாதம் 19ம் தேதியன்று மாநிலம் முழுவதும் கட்சிக்காக உறுப்பினர் பதிவு நடத்தப்பட்டது. தற்போது வரை சுமார் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கின்றனர். ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 30 லட்சமாக அதிகரிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சந்திரசேகர் ராவ் பேருந்தில் பயணித்தார். இவருக்கு பின்னால் சுமார் 6 கி.மீ தூரம் வரை 600 கார்களில் ஆதரவாளர்கள் அணிவகுத்தனர். இக்காட்சி தெலுங்கு சினிமாக்களின் சீன்களையை மிஞ்சுவதாக இருந்துள்ளது.
இந்த பயணத்தின்போது தாராசிவில் உள்ளூர் பெண்கள் கனமழையையும் பொருட்படுத்தாது சந்திரசேகர் ராவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்ட அவர், அங்கிருந்து சோலாப்பூருக்கு புறப்பட்டார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரை பார்க்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க கேசிஆர் தொடர்ந்து முயன்று வருகிறார். இதற்காகதான் தெலங்கானா ராஷ்டிர சமிதி எனும் தன்னுடைய கட்சி பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். அதேபோல எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications