அடுத்தடுத்து மோதிய 8 வாகனங்கள்.. புனேவில் பயங்கர விபத்து! 7 பேர் பரிதாப பலி
மும்பை: புனேவின் நவாலே பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வானங்கள் மோதியதில் 2 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "சிங்ககாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்ஃபி பாயிண்டில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் கட்டுப்பாட்டை இழந்தது. இந்தச் சம்பவம் மாலை 5:30 மணியளவில் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்தது.
அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கியதால் தீப்பிடித்தது. தகவல் கிடைத்தவுடன், புனே நகர காவல்துறை மற்றும் புனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, பின்னர் சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையிலிருந்து சேதமடைந்த வாகனங்களை அகற்றும் பணியும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த பணிகள் நிறைவடைய சிறிது நேரம் ஆகும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த வழியை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே இந்த வழியில் பயணிக்கவும்" என்று கூறியிருக்கிறார்.
இந்த பாலத்தில் விபத்து நடப்பது இது முதல்முறை கிடையாது. ஏற்கெனவே, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்துக்கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications