படுத்த படுக்கையாக இருந்த மனைவி.. மனநலம் பாதித்த மகள்.. கழுத்தை அறுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்
மும்பை: மும்பை அந்தேரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியையும் மனநலம் குன்றிய மகளையும் 89 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தேரி கிழக்கு பகுதியில் ஷேரே பஞ்சாப் காலனியை சேர்ந்தவர் புருஷோத்தம் சிங் காந்தோக் (89). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 81 வயதில் ஜாஸ்பீர் கவுர் என்ற மனைவியும், 66 வயதில் கமல்ஜித் கவுர் என்ற மகளும் இருந்தனர்.
புருஷோத்தமின் மனைவி நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மூத்த மகள் குர்பீந்தர் கவுர். திருமணமாகி வேறு ஒரு பகுதியில் இருந்து வருகிறார்.

மகள்
இந்த நிலையில் மனைவியையும் மகளையும் புருஷோத்தம்தான் கவனித்து வந்துள்ளார். இருவரும் படுத்த படுக்கையாகவே இருந்துள்ளனர். அவர்களது தேவையான பணிவிடைகளை புருஷோத்தம்தான் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் புருஷோத்தம் முதியவர் என்பதால் அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.

கத்தி
இதனால் தொடர்ந்து அவர்களை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் இருவரையும் கொன்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார். உடனே சமையலறைக்கு சென்ற அவர் கத்தியை கொண்டு இருவரின் கழுத்தையும் அறுத்துள்ளார். இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டனர்.

கழுத்து அறுத்த கணவர்
இதையடுத்து சுமார் 12 மணி நேரம் கழித்து அதே பகுதியில் வசித்து வரும் மூத்த மகள் குர்பீந்தருக்கு போன் செய்து கழுத்தை அறுத்த விஷயத்தை தெரிவித்துவிட்டார். இதனால் பதறியடித்து கொண்டு குர்பீந்தர் தனது தந்தை இருக்கும் பிளாட்டிற்கு தனது கணவர், மகன்களுடன் சென்றுள்ளார். கதவை தட்டிய போது புருஷோத்தம் கதவை திறக்க மறுத்துவிட்டார். போலீஸுக்கு போன் செய்து அவர்கள் வந்தால் மட்டுமே திறப்பேன் என்றார்.

ரத்த வெள்ளம்
இதையடுத்து குர்பீந்தர் தனது கணவருடன் மேகவாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது போலீஸார் சென்றவுடன் புருஷோத்தம் கதவை திறந்துள்ளார். உள்ளே போய் பார்த்த போது ஜாஸ்பீரும், கமல்ஜித்தும் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதையடுத்து குர்பீந்தர் தனது தந்தையிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டுள்ளார்.

வலியால் துடித்த மகள்
அதற்கு அவர் அவர்கள் வலியால் துடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் அவர்கள் தூங்க போன பிறகு நான் அவர்களின் கழுத்தை அறுத்துவிட்டேன் என்றார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். முதியவர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications