கன்னத்தில் அறைந்த டீச்சர்.. நிலைகுலைந்த 9 வயது சிறுமி.. மூளைக் காயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை
மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒவ்வொரு விஷயத்திலும் செய்யும் தவறில் இருந்துதான் எது சரி என்பதையே கண்டறிய முடியும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும். பொதுவாக குழந்தைகள் தவறு செய்து செய்துதான் சரி எது என்பதற்கு பழக்கப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும்போது குழந்தைகளை அடிக்கடி அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களால் அந்தக் குழந்தைகள் மன ரீதியாக கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

குழந்தைகளை அடிப்பது சில சமயங்களில் சூழலைப் பொறுத்து குற்றச் செயலாகக் கூட மாறிவிடும் அபாயம் உள்ளது. சரியாக சாப்பிடவில்லை, ஹோம் வொர்க் செய்யவில்லை, சொல் பேச்சைக் கேட்பதில்லை என்று தான் பெரும்பாலும் அடிக்கிறோம். உண்மையில் எதையெல்லாம் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நாம் வரைமுறைப்படுத்தி தருவதில்லை.
சிறிய தவறுக்கு கூட குழந்தைகளை அடிப்பது சில சமயங்களில் அவர்களை மிகவும் உளவியல் ரீதியாகப் பாதிப்பதோடு சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அந்த வகையில், மும்பையில் டியூசன் டீச்சர் ஒருவர் சிறுமியை பலமாக தாக்கியதில் 9 வயது சிறுமி மூளைக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பே அருகே உள்ளது நல்லசோபரா என்ற பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி டியூசனுக்கு செல்வது வழக்கம். அக்டோபர் 5 ஆம் தேதி வழக்கம்போல சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை ஆசிரியர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக சிறுமிக்கு கடும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், நல்லசோபரா பகுதியைச் சேர்ந்தவர் டியூசன் ஆசிரியர் ரத்னா சிங். 20 வயதான இப்பெண் வகுப்பில் சிறுமியின் கன்னத்தில் இரண்டு முறை பலமாக தாக்கியுள்ளார். இதில், சிறுமியின் கம்மல் கன்னத்துக்குள்ளேயே சென்றுள்ளது. அந்த அளவுக்கு பலமாக அவர் சிறுமியைத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்தபோது சிறுமிக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தாடை மற்றும் மூச்சுக்குழாயிலும் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஒன்பது நாட்களாக 9 வயது சிறுமி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமாக உள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து டியூசன் ஆசிரியரான ரத்னா சிங்கிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications