ரூ 2 லட்சம் பணத்தை திருடியதாக கருணாஸ் பட நடிகை பரபரப்பு புகார்.. வீட்டு பணியாளருக்கு போலீஸ் வலை
மும்பை: ரூ 2 லட்சம் பணத்தை திருடியதாக தன் வீட்டு பணியாளர் மீது பாஜக எம்பி வேட்பாளரும் நடிகையுமான நவ்நீத் கவுர் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தர் நவ்நீத் கவுர். இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு மாடலிங்கில் ஈடுபட்டார். இதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற்றார். தெலுங்கில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு நவ்நீத் தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு அனுமன் சாலிசா படித்தார். இதையடுத்து அவரும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மார்ச் 28 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நவ்நீத்துக்கு அமராவதி தொகுதியிலேயே போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நவ்நீத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் தன் வீட்டில் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த அர்ஜுன் முகியா என்பவர், ரூ. 2 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்ஜுன் முகியா தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள ஐஸ்வர்யாவின் வீட்டு பணிப்பெண் ஈஸ்வரி, அவருடைய பாரம்பரிய நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியிருந்தார். அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவரையும் போலீஸார் கைது செய்தனர். அது போல் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் பணியாளர் நகைகளை திருடியதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் எழுந்தது.
இந்த நிலையில் விஜய் யேசுதாஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி போலீஸார் வழக்கை முடித்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அது போல் நடிகை ஷோபனா வீட்டிலும் பணிப்பெண் திருடியதாகவும் ஆனால் அதை கண்டுபிடித்த நடிகை, அந்த பணிப்பெண்ணை பணியிலிருந்து நீக்கிவிட்டாராம். ஆனால் போலீஸில் புகார் கொடுக்காமல் மன்னித்துவிட்டதாக செய்திகள் வந்தன.












Click it and Unblock the Notifications