அதானியின் ரூ.1000 கோடி கடன் பத்திரங்கள்.. வெறும் 45 நிமிடத்தில் முழுமையாக விற்று தீர்ந்தது
மும்பை: அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) தனது ரூ.1,000 கோடி மதிப்பிலான மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCDs- non-convertible debentures) வெளியிட்டிருந்தது. அது வெளியாகி 45 நிமிடங்களுக்குள்ளேயே முழுமையாக சப்ஸ்கிரைப் ஆகி அமோக வரவேற்பைப் பெற்றது. இதன் ரூ.500 கோடி அடிப்படை ரீல்ஸ கூட வெறும் பத்து நிமிடங்களில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
"கிரீன்ஷூ" ஆப்ஷனையும் சேர்த்து, மொத்தத் தேவை ரூ.1,000 கோடியைத் தாண்டியது. ஜனவரி 6, 2026 அன்று தொடங்கப்பட்ட இந்த கடன் பத்திர வெளியீடு ஜனவரி 19, 2026 அன்று முடிவடைகிறது. இந்த கடன் பத்திரங்கள் ஆண்டுக்கு 8.90% நிகர வட்டியை வழங்குகின்றன. இவை மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை என இரண்டிலும் பட்டியலிடப்படும்.

கடன் பத்திரங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். ICRA மற்றும் CARE கடன் ரேட்டிங்ஸ் நிறுவனங்களால் 'AA-' எனும் நிலையான ரேங்கிங்கை இந்தக் கடன் பத்திரங்கள் பெற்றுள்ளன. இது சில்லறை முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாய்ப்புகளில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. மேலும் நல்ல ஒரு லாபத்தையும் வழங்குகிறது.
இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் குறைந்தது 75%, தற்போதுள்ள கடன்களைத் திரும்பச் செலுத்தப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை பொது வர்த்தக நோக்கங்களுக்காக ஒதுக்கப்படலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 24, 36, 60 மாதங்களுக்குக் காலாண்டு, ஆண்டு மற்றும் மொத்தமாக வட்டி கிடைக்கும் வகையில் என எட்டு வெவ்வேறு வகைகளில் கடன் பத்திரங்கள் கிடைக்கின்றன.
அதானி எண்டர்பிரைசஸ் மீதான வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, 2025 ஜூலையில் வெளியிடப்பட்ட முந்தைய ரூ. 1,000 கோடி கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மூன்று மணி நேரத்தில் முழுமையாக சப்ஸ்கிரைப் ஆகியிருந்தது. நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட், டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்கள் மற்றும் டிப்சன்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை பிரதானமாக முதலீடு செய்திருந்தது.
கடந்த ஆறு மாதங்களாக, அதானி எண்டர்பிரைசஸ் பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக உரிய நேரத்தில் செயல்படுத்தி வருகிறது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 2025 அக்டோபர் 8 அன்று திறக்கப்பட்டு, டிசம்பர் 25 முதல் அங்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.. விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக பெரிய AI டேட்டா சென்டர் வளாகம் அமைக்கப்படும் என்று அக்டோபரில் கூகுள் மற்றும் அதானி கனெக்ஸ் கூட்டாக அறிவித்தன.
அதேபோல அதானி எண்டர்பிரைசஸின் சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 செப்டம்பரில் நானாசா-பிட்கான் HAM சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. உத்தரகண்ட்டில் சோன்பிரயாக்- கேதார்நாத் கம்பிவடப் பாதை, மற்றும் பீகாரில் இரு சாலைத் திட்டங்கள் (முங்கர்-சுல்தான்கஞ்ச், சுல்தான்கஞ்ச்-சபோர்) உள்ளிட்ட மூன்று புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தக் கடிதங்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications