என்சிபி சட்டசபை குழு தலைவர் பொறுப்பு.. அஜித் பவார் அதிரடி நீக்கம்! புதிய தலைவரை நியமித்த சரத் பவார்
Recommended Video
மும்பை: என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி அமைக்க 170 எம்எல்ஏக்கள் இருந்தனர் என என்சிபியின் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். அதே சமயம் என்சிபி சட்டசபை குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாகவும் சரத்பவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி தலைமையிலான கூட்டணி அரசு உருவாவதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவும் முடிவு செய்திருந்தன.
ஆனால் மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான ஆட்சி இன்று பொறுப்பேற்றது. இதில் தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்.

அஜித்பவாரின் முடிவு
இது குறித்து சரத்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்துள்ளது என்சிபியின் முடிவு அல்ல. அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாகும். அஜித் பவாரின் இந்த முடிவை நான் ஆதரிக்கவில்லை என்றார்.

காங்கிரஸ்
இதனிடையே மகாராஷ்டிராவில் சிறிது நேரத்தில் நடந்த விஷயங்களால் சிவசேனாவும், காங்கிரஸும் என்சிபியும் கடும் அதிர்ச்சி அடைந்தன. மகாராஷ்டிரத்தில் நடந்த அரசியல் திருப்பத்துக்கு பிறகு உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சரத்பவார் கூறுகையில் என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இருந்தது.

தொண்டர்கள்
எங்கள் கூட்டணிக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. எங்களுக்கு சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவாக இருந்தனர். அஜித் பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது. பாஜக ஆட்சி அமைப்பதை எந்த என்சிபி தலைவர்களும் தொண்டர்களும் விரும்பவில்லை.

ஆளுநர் மாளிகை
நாங்கள் மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம். அஜித் பவாருடன் ஆளுநர் மாளிகைக்கு 11 என்சிபி எம்எல்ஏக்கள் சென்றனர். அந்த எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயும்.

3 எம்எல்ஏக்கள்
10 முதல் 12 என்சிபி எம்எல்ஏக்கள் பட்னவீஸ் பதவியேற்பு விழாவுக்கு சென்றனர். மற்ற எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு எதிராக அஜித் பவார் முடிவெடுத்து விட்டார். தவறான வழியில் தங்களை அழைத்து சென்றதாக 3 எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

நவ.30-இல் கவிழும்
தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்படுகிறார். புதிய தலைவருக்கான தேர்வு இன்று மாலை நடைபெறும். தேவேந்திர பட்னவீஸின் ஆட்சி நவம்பர் 30-இல் கவிழும் என்றார் சரத்பவார். இதேபோல மாலையில் பவார் தலைமையில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டசபை குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் திலிப் வாலே பாட்டில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications