அரசியலில் முதல் வாரிசு பிள்ளைகதான்.. அப்புறம்தான் சித்தப்பா, மச்சான்.. இந்த லிஸ்ட்டை பாருங்களேன்!
மும்பை: இந்திய வரலாற்றில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் என்னதான் உறவினர்களாக இருந்தாலும் தமது சொந்த பிள்ளைகளைத்தான் அரசியல் வாரிசுகளாக சரித்திரத்தின் பக்கங்களில் நிலைநிறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
2015-ம் ஆண்டு டெல்லியில் ஒரு பிரம்மாண்ட விழா. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் என ஒட்டுமொத்த டெல்லி அரசியலுமே அந்த விழாவில் சங்கமித்துக் கிடக்கிறது. விழா நடைபெறும் அரங்கத்தின் முகப்பில் அந்த மனிதர் பிரமுகர்களை விழுந்து விழுந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார். விழா தொடங்கியது- மேடைக்குப் போனவர்கள் பேசினார்கள்.. எல்லோரும் அந்த அப்பாவையும் மகளையும் தான் விடாமல் பார்த்தார்கள்.. ஒருவகையில் மகளை அரசியல் வாரிசாக அந்த தந்தை அறிவிக்கும் மாநாடு என்றே பார்க்கப்பட்டது.

டெல்லி விழாவின் நாயகன் சரத்பவார்
விழா அரங்கில் வரவேற்று ஒதுங்கி நின்றவர் அஜித்பவார்
மேடையில் அரசியல் வாரிசாக ஜொலித்தவர் சுப்ரியா சுலே..
மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் ஆக்டிவ் தலைவராகத்தான் இருக்கிறார் அஜித் பவார். இத்தனைக்கும் பாஜக ஆதரவு வரை போய் துணை முதல்வராகப் பதவியேற்று துரோகம் செய்துவிட்டு வெகு இயல்பாகவே கட்சிக்கும் திரும்பியவர். அந்த அளவுக்கு தேசியவாத காங்கிரஸ் அவருக்கான கட்சியாக இருந்தது. அஜித்பவார், சரத்பவாரின் அண்ணன் மகன். ஆனால் சொந்த மகளான சுப்ரியா சுலேவைத்தான் வருங்கால வாரிசாக சரத்பவார் தொடர்ச்சியாக அரங்கேற்றி வந்தார்... அண்மையில் தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவர்களில் ஒருவராகவும் சுப்ரியா சுலேவை அறிவித்தார் சரத்பவார்.
இதே மகாராஷ்டிராவில் பால்தாக்கரே காலத்தில் அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரே சிவசேனாவின் அதிரடி முகமாக இருந்தார். ஆனால் பால்தாக்கரே, சிவசேனாவை சொந்த மகன் உத்தவ் தாக்கரேவுக்கு தாரைவார்த்து கொடுத்தார். ராஜ்தாக்கரே தனிக் கட்சி தொடங்க வேண்டிய நிலை வந்தது. உத்தவ் தாக்கரே அவரது அரசியல் வாரிசாக மகனையும் உஷாராக கொண்டுவந்துவிட்டார்.
தெலுங்கானாவில் உறவினரான ஹரீஷ் ராவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்து ஓரமாக உட்கார வைத்துவிட்டார் முதல்வர் கே.சந்திரசேகர ராவ். மகன் கேடி ராமா ராவ்தான் இப்போது எல்லாமும். அந்த கட்சியில் டெல்லி முகமாக மகள் கவிதாவை முன்னிறுத்தி இருக்கிறார் கேசிஆர்.
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சிக்காக உழைத்த உறவினரான மன்பிரீத் பாதலை ஓரம்கட்டிவிட்டு மகன் சுக்பீர்சிங்கை கொண்டு வந்தார் பஞ்சாப் சிங்கம் பிரகாஷ்சிங் பாதல்.
உத்தரப்பிரதேசத்தில் சித்தப்பா, தம்பி என்றெல்லாம் பார்க்காமல் சிவபால் யாதவ் கதைக்கு முடிவுரை எழுதினார் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம்/ அவரது மனசாட்சியான உறவினர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் குடும்பம் இடையேயான சச்சரவுகள் அனைவரும் அறிந்த கதை. இப்போது இந்திய அரசியலின் சரித்திரப்படியேயான வாரிசு நிரல்முறைதான் திமுகவிலும்.
இதில் வேடிக்கை என்னவெனில் வாரிசு அரசியலுக்கு எதிராக வாளேந்தி புதிய பூபாளம் படைக்க புலியாய் புறப்பட்ட புரட்சிப் புயல் வைகோ இப்போது தமது மதிமுகவுக்கு மகன் துரை வைகோவைத்தான் அடுத்த அத்தியாயம் எழுத அழைத்து வந்துள்ளார். இதுதான் இந்திய அரசியல் என்பது எப்போது எல்லோருக்கும் விளங்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications