சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்.. ஏக்நாத் ஷிண்டே மகன் கிண்டல்.. பரபரப்பில் மகாராஷ்டிரா!
மும்பை: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஷிகாந்த் ஷிண்டே, பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதை கிண்டல் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று திடீரென சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இவருக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
40 எம்.எல்.ஏக்களும் சடலமாக திரும்ப நேரிடும் என மிரட்டல்- உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அதிருப்தி கோஷ்டி
சஞ்சய் ராவத் எச்சரிக்கை
இதனிடையே சிவசேனா கட்சி மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ-க்களுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில், அசாமில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 40 பேர் உயிருடன் இல்லை. அவர்களது உயிரற்ற உடல்களே மகாராஷ்டிரா திரும்பும். கவுகாத்தியில் இருந்து புறப்படும்போது, மனதளவில் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள். இங்கே எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அசாமில் இருந்து வந்து சேரும் ஆன்மாக்கள் இல்லாத உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக சட்டசபைக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
தகுதிநீக்க வழக்கு
மகாராஷ்டிரா சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து சிவசேனா எம்எல்ஏ-க்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மகாராஷ்டிர அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தனது தலைமையில் உள்ள 38 எம்எல்ஏ-க்களின் ஆதரவை திரும்பப்பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே கூறினார். மேலும், மகாராஷ்டிர அரசு பெரும்பான்மை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத்துக்கு சம்மன்
இதனிடையே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் அவரின் சொத்துக்களும் முடக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பேசிய அவர், நான் இதற்கெல்லாம் பயன்படுபவன் அல்ல. என் சொத்துக்களை முடக்கி, என்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே மகன் கிண்டல்
இந்தநிலையில், அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ள சஞ்சய் ராவத்தை சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கிண்டல் செய்துள்ளார். அவர், அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் பெற்ற சஞ்சய் ராவத்திற்கு வாழ்த்துகள். தகுதிநீக்க போராட்டத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம். மகாராஷ்டிரா மக்கள் அனைத்து விவகாரங்களையும் பார்த்து வருகிறார்கள். நிச்சயம் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.