நடுகாட்டுக்குள் பெண், மூன்று குழந்தைகள் பிணம்... மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மும்பை; மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 30 வயதுடைய பெண், அவரது 3 குழந்தைகள் அடர்ந்த காட்டுக்குள் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பேரும் செப்டம்பர் மாதம் மாயமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்றார். அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவில் பச்சப்பூரில் உள்ள காட்டில் ஒரு பெண், 3 குழந்தைகள் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இது குறித்து பட்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணமாக கிடந்த பெண் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ரஞ்சனா பாங்ரி(30) என்பதும், பிணமாக கிடந்த ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் அவருடைய பிள்ளைகள் என்பதும் தெரியவந்தது.அந்த குழந்தைகளுக்கு 6 முதல் 12 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இவர்கள் 3 பெரும் மாயமாகி விட்டதாக ஏற்கெனவே புகார் வந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்தது.
சுமார் இரன்டு மாதங்கள் கழித்து நான்கு பேரும் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அந்தப் பெண்ணின் கணவர் ஸ்ரீபத் பாங்ரி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மூன்று குழந்தைகளும் காட்டு பகுதிக்கு ஏன் சென்றார்கள்? அவருக்கும் கணவருக்கும் தகராறு இருந்ததா? அவர்களை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.