ஆடையோடு உடம்பைத் தொடுவது குற்றமாகாது... சர்ச்சை தீர்ப்பளித்த பெண் நீதிபதி பதவிக்காலம் குறைப்பு!
மும்பை: 12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது என்பது உள்பட இரண்டு சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் பதவி காலத்தை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நீதிபதியை கூடுதல் அமர்வு நீதிபதியாக 2 ஆண்டுகள் நியமித்து பின்னர் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கம்.ஆனால் புஷ்பா கனேடிவாலா சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதால் அவர் ஓர் ஆண்டு மட்டுமே கூடுதல் நிதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டிய நீதிபதியே, அதுவும் பெண் நீதிபதியே இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கலாமா? என்று பல்வேறு தரப்பில் இருந்தும் ஏற்கனவே கண்டங்கள் எழுந்தன.

சர்ச்சைகுள்ளான பெண் நீதிபதி
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் தங்களுக்கு நீதிமன்றம் மூலம் நல்ல நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த அளவுக்கு நீதி வழங்கும் கோவிலாக நீதிமன்றம் திகழ்கின்றது. நீதிபதிகளை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஒரு நீதிபதி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அநீதி இழைத்து விட்டு, பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு நீதி வழங்கி உள்ளார். அதுவும் ஒரு முறை அல்ல. இரண்டு முறை.

ஆடையை தொடுவது குற்றமாகாது
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உள்ள புஷ்பா கனேடிவாலாதான் அந்த நீதிபதி.ஒரு பாலியல் தொடர்பான வழக்கில், ''12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றமாகாது. உடலோடுஉடல் தொடர்பில் இல்லை" எனத் தீர்ப்பளித்து குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தவர்தான் இந்த புஷ்பா கனேடிவாலா.

பேண்ட் ஜிப் திறக்க வைப்பது தவறு கிடையாது
இது மட்டுமா? மற்றொரு வழக்கில் " 5 வயது சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து தீர்ப்பளித்தவர்தான் இந்த புண்ணியவதி. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டிய நீதிபதியே, அதுவும் பெண் நீதிபதியே இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கலாமா? என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

பரிந்துரையை வாபஸ் வாங்கிய கொலிஜியம்
இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த மாதம் நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமர்வு, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமித்து பரிந்துரைத்தது. பின்னர் புஷ்பா அளித்த சர்ச்சை தீர்ப்பால் தங்கள் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற்றனர்.

பதவிக்காலம் குறைப்பு
மேலும், மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு புஷ்பா கனேடிவாலாவை நியமித்தும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு நேற்று வெளியி்ட்ட ஒரு அறிவிக்கையில், " மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புஷ்பா கனேடிவாலா 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஓர் ஆண்டுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்" என அதிரடியாக அறிவித்தது. பொதுவாக ஒரு நீதிபதியை கூடுதல் அமர்வு நீதிபதியாக 2 ஆண்டுகள் நியமித்து பின்னர் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் புஷ்பா கனேடிவாலா சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதால் அவர் ஓர் ஆண்டு மட்டுமே கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications