பீமா கோரேகான் வழக்கு: பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி உடல்நிலையை ஆய்வு செய்ய மும்பை ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்று மும்பை ஜேஜே மருத்துவமனை டீனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு முன்னதாக சனிவர் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பீமா கோரேகான் வன்முறை வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) சமூக செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட ஏராளமானோரை கைது செய்தது. இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி கடந்த ஆண்டு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டு வருகிறார். 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி கைது செய்யப்பட்டு மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறையில் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலை பாதிக்கபட்டது.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்று மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு உத்தரவிட்டது; மேலும் இன்று ஜேஜே மருத்துவமனைக்கு ஸ்டேன் ஸ்வாமியை அனுப்ப வேண்டும் என்று சிறை நிர்வாகத்துக்கும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை பாதிப்புக்குள்ளான டெல்லி பேராசிரியர் ஹனிபாபுவை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2020-ம் ஆண்டு பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யபட்டார்.












Click it and Unblock the Notifications