ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஹைகோர்ட்!
மும்பை: போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் ஆர்யானின் நண்பர்களான அர்பாஸ் மெர்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.
Recommended Video
மும்பையிலிருந்து இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 3-ஆம் தேதி போதை பொருள்களை சப்ளை செய்யும் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் பயணிகள் போல் வேடமணிந்து அந்த கப்பலில் பயணித்தனர். கப்பல் புறப்பட்டு நடுக்கடல் வந்தவுடன் பார்ட்டி தொடங்கியது. பலர் போதை பொருள்களை பயன்படுத்த தொடங்கினர்.
ஷாரூக் கான் மகன்
அப்போது அவர்களை மாறுவேடத்தில் இருந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்தனர். இதில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட சிலர் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது உறுதியானது. மேலும் செல்போனிலும் போதை பொருட்களை கொள்முதல் செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷாரூக் கான் மகன் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஷாரூக் கான் நடித்த BYJUS விளம்பரத்தையும் அந்த நிறுவனம் நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆர்யானை எப்படியாவது தீபாவளிக்குள் ஜாமீனில் எடுத்துவிட ஷாரூக் கான் போராடி வந்தார். இருமுறை ஜாமீன் கோரியும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஆர்யான் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யான் கான் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகினார்.
1300 பேர்
அப்போது அவர் கூறுகையில் அந்த கப்பலில் 1300 பேர் இருந்துள்ளனர். ஆர்யானுக்கு அர்பாஸ் மற்றும் ஆச்சிட் ஆகியோரை தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த கைது நடவடிக்கை தற்செயலாக நடந்தது இல்லை. வேண்டுமென்ற சதி செய்யப்பட்ட நிகழ்வு . யாரோ செய்த சதியால் ஆர்யான் கானும் அவரது நண்பர்களும் சிக்கியுள்ளனர் என ரோத்தகி வாதம் செய்தார்.
என்சிபி வழக்கறிஞர்
இதையடுத்து என்சிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன் வாதத்தில் ஆர்யான் கானை என்சிபி அதிகாரிகள் கைது செய்த போது அவரிடம் போதை பொருள் இருந்தது. அவருக்கு போதை பொருள் கடத்தல்காரர்களுடன் வணிக அளவிலான தொடர்பு இருந்துள்ளது. சதியை நிரூபிப்பது கடினம். எப்படி சதி செய்யப்பட்டது என்பது சதி செய்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றார்.
வாதம்
மேலும் ஆர்யானுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என போதை பொருள் தடுப்பு பிரிவினர் வாதம் செய்தனர். எனினும் இரு தரப்பு வாதங்களை கேட்டவுடன் ஆர்யானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆர்யான் கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகளை நாளை அறவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 25 நாட்கள் கழித்து ஆர்யானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.