"ஜாதி கொடுமை".. என் மகன் தற்கொலைக்கு இதுதான் காரணம்.. கதறி அழுத பாம்பே ஐஐடி மாணவரின் தந்தை
"தலித் என்று தெரிந்த பிறகு அவனது நண்பர்கள் கூட அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக தர்ஷன் கூறி அழுதான்"
மும்பை: ஜாதி ரீதியிலான கொடுமையே தனது மகன் சாவுக்கு காரணம் என்று பாம்பே ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் தந்தை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த பிறகு தன்னுடன் பல மாணவர்கள் பேசுவது இல்லை என்றும், கேலி வார்த்தைகளால் சித்ரவதை செய்வதாகவும் தனது மகன் பலமுறை கூறி அழுததாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பாம்பே ஐஐடி நிர்வாகம், தங்கள் வளாகத்தில் ஜாதி பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளது.

தலித் மாணவர் தற்கொலை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், பாம்பே ஐஐடியில் பி டெக் படிப்பில் 3 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். ஐஐடி நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி தர்ஷன் படித்து வந்திருக்கிறார். முதலாம் செமஸ்டர் தேர்வு கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால் மாணவர்கள் சிலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்ற மாணவர்கள் மதிய உணவுக்காக சென்றிருந்த போது, விடுதியின் 7-வது மாடிக்கு சென்ற தர்ஷன் அங்கிருந்து குதித்தார்.

ஜாதி கொடுமை..
இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், பாம்பே ஐஐடி நிர்வாகத்திடமும், தர்ஷனுடன் தங்கியிருந்த சக மாணவர்களுடனும் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர், தர்ஷனுக்கு எதிராக பேராசிரியர்களும், பல மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டியதே அவர் தற்கொலைக்கு காரணம் எனக் கூறினர். எனினும், தற்கொலை குறிப்பு எதையும் தர்ஷன் எழுதி வைக்காததால் போலீஸார் இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

சகோதரி கண்ணீர் பேட்டி
இந்நிலையில், தர்ஷனின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அவரது சகதோரரி ஜான்வி சோலங்கி செய்தியயாளர்களிடம் கூறுகையில், "கடந்த மாதம் தர்ஷன் வீட்டுக்கு வந்த போது, மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான். அவனிடம் விசாரித்தபோது, விடுதியில் தனக்கு நடக்கும் ஜாதி ரீதியான கொடுமைகளை அவன் கூறினான். தலித் என்று தெரிந்த பிறகு அவனது நண்பர்களும், ஒரே அறையில் தங்கியிருந்தவர்களும் கூட அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், அவர்கள் வெளியே போகும் போது தன்னை சேர்த்துக் கொள்ள மறுப்பதாகவும் கூறி அழுதான். இதை கேட்ட நாங்கள், போக போக எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைத்தோம். ஆனால் அதற்குள் இப்படி முடிவு எடுப்பான் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்றார்.

"நீ மட்டும் இலவசமாக படிப்பாயா?"
தர்ஷனின் தந்தை ராம்தேஷ் பாய் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் ஐஐடியில் இலவசமாக தர்ஷன் படிக்கிறான் என்று தெரிந்ததும், சக மாணவர்கள் அவன் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பல ஆயிரம் ரூபாய் கட்டி படிக்கும் போது, நீ மட்டும் இலவசமாக படிப்பாயா என கேட்டு அவனை பல முறை திட்டியுள்ளனர். இதை என்னிடம் கடந்த மாதம் தர்ஷன் கூறினான். ஜாதி பாகுபாடும், கேலி வார்த்தைகளுமே எனது மகனை இந்த முடிவு எடுக்க தள்ளியிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடி்ககை எடுக்க வேண்டும்" என கண்ணீருடன் கூறினார்.











Click it and Unblock the Notifications