ஆணவக் கொலை: கர்ப்பிணியின் தலையை துண்டித்த மைனர் தம்பியும், தாயும்.. தலையுடன் செல்பி எடுத்த கொடூரம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் 19 வயது கர்ப்பிணியின் தலையை துண்டித்து அந்த தலையை அக்கம்பக்கத்து வீட்டாரிடம் காண்பித்ததோடு அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவத்தில் அந்த பெண்ணின் டீன் ஏஜ் வயது தம்பியும், தாயும் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் கீர்த்தி தோர் (19). இவர் மாற்று ஜாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இவரது திருமணத்தால் கீர்த்தியின் தாய்க்கு மன உளைச்சலும் அவமானமும் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கீர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டார் அவரது தாய்.

தாய் வீட்டிலிருந்து போன்
தாய் வீட்டில் இருந்து போன் வந்ததும் மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி தான் கர்ப்பமாக இருப்பதை தாயிடம் கூறி மகிழ்ந்தார். இதையடுத்து அந்த தாய், கீர்த்தியிடம் அவரை பார்க்க தம்பியுடன் வருவதாக தெரிவித்தார். இதனால் கீர்த்திக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தனது கணவர் மற்றும் மாமியாரிடம் சொல்லி மகிழ்ந்தார்.

மாமியாருடன் வேலை
கடந்த 5ஆம் தேதி கீர்த்தியின் வீட்டிற்கு அவரது தாயும் தம்பியும் சென்றனர். அப்போது மாமியாருடன் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி (வயல் வெளிக்கு நடுவே வீடு) தாயையும் தம்பியையும் தூரத்திலிருந்தே பார்த்து விட்டு ஓடோடி வந்தார். உடனே வீட்டிற்குள் இருவரையும் அழைத்து சென்ற கீர்த்தி அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து டீ போட்டு தருவதற்காக வீட்டின் சமையலறைக்கு சென்றார்.

கீர்த்தியின் கணவர்
அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கீர்த்தியின் கணவரிடம் அவரது தாயும் தம்பியும் எதுவும் பேசவில்லை என தெரிகிறது. சமையலறைக்கு சென்ற தனது அக்காவை பின்தொடர்ந்து சென்ற தம்பி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு அக்காளின் தலையை துண்டித்துள்ளார்.

சிறுவன்
அப்போது அங்கிருந்த பாத்திரங்கள் விழுந்ததை அறிந்து வீட்டில் படுத்திருந்த கணவன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கர்ப்பணி மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அழுதார். உடனே அவரையும் கொலை செய்ய அந்த சிறுவன் முயன்றுள்ளான். ஆனால் அவனிடம் இருந்து எப்படியோ தப்பினார்.

சிறுவன் சரண்
இதையடுத்து கையில் தலையுடன் வந்த அந்த சிறுவன் அங்கிருந்த கீர்த்தியின் மாமியாருக்கு காண்பித்துவிட்டு வெளியே ஓடிச் சென்று அக்கம்பக்கத்தினரிடமும் காண்பித்துள்ளார். இதையடுத்து துண்டிக்கப்பட்ட கீர்த்தியின் தலையுடன் தம்பியும் தாயும் செல்பி எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து வெட்டப்பட்ட தலையுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் தம்பியும் தாயும் சரணடைந்தனர். இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications