ஒரு வாரம் தான் டைம்.. உயர்த்தப்படும் இறக்குமதி வரி? தங்கம் விலை நிற்காது போலயே.. உடனே கடைக்கு ஓடுங்க
மும்பை: அடுத்த வாரம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தங்கத்தை இப்போதே வாங்கலாமா என்பது குறித்து பலரும் குழம்பிப் போய் உள்ளனர். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர்கள் இது தொடர்பாக என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் தான் எப்போதும் மக்களின் பிரதான முதலீடாக இருந்து வந்துள்ளது. பணத்தை சிறுக சிறுக சேமித்து தங்கத்தில் முதலீடு செய்வதையே மக்கள் வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர்.

கொரோனா வந்த பிறகு உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை, அதன் பிறகு குறையவே இல்லை. தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் தங்கம் விலையால் நடுத்தர வர்க்கத்தினரால் அதை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி வரி:
இந்தச் சூழலில் தான், கடந்தாண்டு லோக்சபா தேர்தலுக்குப் பிறகுத் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்த உடனேயே தங்க இறக்குமதி பல மடங்கு அதிகரித்தது. 2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 2024 ஆகஸ்ட் மாதம் தங்கம் இறக்குமதி சுமார் 104 சதவீதம் அதிகரித்து 10.06 பில்லியன் டாலர்களை எட்டியது. அதேநேரம் இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி 23 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து, 1.99 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக பற்றக்குறை:
கடந்த பட்ஜெட்டில், பணவீக்கத்தைச் சமாளித்து விலையை நிலைப்படுத்தவும், போதுமான சப்ளையை உறுதி செய்யவும் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது. இருப்பினும், இறக்குமதி வரி குறைப்பால் விலை குறைந்து மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கினர். இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கம் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இதனால் தங்க இறக்குமதி அதிகரிப்பதால் நாம் அதிக டாலர்களை செலவிட வேண்டி உள்ளது. இது வர்த்தக பற்றாக்குறையை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.

பொதுவாக டாலர் வலுவடைந்து வந்தால் தங்கம் விலை குறைய வேண்டும். ஆனால், கடந்த வாரம் டாலர் மதிப்பும் உயர்ந்தது தங்கத்தின் விலையும் உயர்ந்தது. ரூபாய் மதிப்பு சரிவது உள்ளிட்டவை இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இப்படி தங்கம் விலை தொடர்ந்து உயரும் போதிலும், அதன் இறக்குமதி அதிகரிப்பதால் பொருளாதாரம் சிக்கலைச் சந்திக்கிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இதனால் இந்த முறை பட்ஜெட்டில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க உள்ளதாக எஸ்எஸ் வெல்த் ஸ்ட்ரீட் நிறுவனர் சுகந்தா சச்தேவா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த 2023ஐ காட்டிலும் 2024ம் ஆண்டு தங்க இறக்குமதி அதிகரித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளதாக சுகந்தா தெரிவித்தார்.
நிச்சயம் உயரும்:
ஒருவேளை மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரிக்கவில்லை என்றாலும் கூட தங்கம் விலை வரும் காலங்களில் உயரவே செய்யும் என்கிறார் சுகந்தா. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இறக்குமதி வரி உயர்வு இல்லை என்றாலும் கூட சர்வதேச அளவில் பொருளாதார சூழல் நிச்சயமற்றதாகவே உள்ளது. டிரம்பின் நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் என்ற அச்சத்தால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கலாம்.
மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவையும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவர்கள் வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications