"இப்படியெல்லாம் இருக்க முடியாது" நீதிமன்றத்திலேயே ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி.. வக்கீல்கள் ஷாக்!
மும்பை: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரோகித் தியோ திடீரென கோர்ட் ரூமில் வைத்தே ராஜினாமா செய்தது வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நீதிபதி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக ரோகித் தியோ என்பவர் உள்ளார். கடந்த 2017- ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட ரோகித் தியோ, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நீதிபதியானார். இன்னும் இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவிக்காலம் உள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுதான் ஓய்வு பெற இருக்கிறார். நீதிபதி ரோகித் தியோ பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடரில் இருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா என்பவருக்கு விதிக்கப்பட்டு இருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து உத்தரவிட்டார். எனினும் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அதேபோல், நாக்பூர் - மும்பை சாம்ருத்தி எக்ஸிரஸ் சாலை காண்ட்ராக்டர்கள் மீது வருவாய்துறை எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை செயல்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார் நீதிபதி ரோகித் தியோ. இப்படி பல்வேறு வழக்குகளில் நீதிபதி ரோகித் தியோ பிறப்பித்த உத்தரவு கவனம் பெற்றது. இந்த நிலையில், தான், நீதிபதி ரோகித் தியோ நேற்று திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நீதிமன்றத்தில் வைத்தே இந்த ராஜினாமா முடிவை நீதிபதி அறிவித்தது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன் பேசும் போது நீதிபதி என்ன சொன்னார் என்று வழக்கறிஞர்கள் சிலர் கூறிய தகவல் வருமாறு: நீதிமன்றத்தில் உள்ள அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களை திட்டி இருக்கிறேன்.
எனது குடும்பத்தினர் போன்ற உங்களை காயப்படுத்த நான் விரும்பியதில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நீங்கள் (வக்கீல்கள்) கடுமையாக உழைக்க வேண்டும். சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. இவ்வாறு நீதிபதி கூறியதாக வழக்கறிஞர்கள் கூறினர். மேலும் அவரது ராஜினாமா முடிவுக்கான காரணத்தை நீதிபதி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும் கூறினர்.
எனினும் தனது ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி, தனிப்பட்ட காரணத்திற்காகவே ராஜினாமா செய்ததாகவும் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் கூறினார். ராஜினாமாவை அறிவித்ததும் நீதிபதி முன்பாக விசாரணைக்கு பட்டியலிப்பட்டு இருந்த வழக்குகள் அனைத்தும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்காமல் விடப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக நீதிபதி ரோகித் தியோ, வழக்கறிஞராக பணியாற்றினார். குறிப்பாக மகராஷ்டிர அரசின் பொறுப்பு அட்வகேட் ஜெனரலாக 2016 ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு பணியாற்றி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதி தனது ராஜினாமாவை அறிவித்தது மகாராஷ்டிரா வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications