மத்திய அரசு நேரத்தை வீண் செய்ததுதான் உக்ரைனில் நமது மாணவர்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்: சிவசேனா
மும்பை: ‛‛உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு நேரம் வீணடித்துவிட்டது'' என சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே சண்டை நடந்து வருகிறது. மேலும் உக்ரைனின் முக்கிய நகர்கள் மீது ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் பயத்தில் ஒவ்வொருவரும் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். உக்ரைனில் படித்து வரும் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆபரேஷன் கங்கா
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் ‛ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் விமானங்களில் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவின் புகாரெஸ்ட், ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானங்களில் இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

மத்திய குழு
இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை மீட்க மத்திய அமைச்சர்கள் உக்ரைன் செல்கின்றனர். மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் இந்த மீட்பு பணிக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். இதன்மூலம் இந்தியர்கள் விரைவில் மீட்கப்படலாம் என மத்திய அரசு நம்புகிறது.

சிவசேனா குற்றச்சாட்டு
இந்நிலையில் உக்ரைனில் உள்ள மாணவர்களை மத்திய அரசு தாமதமாக மீட்பதாகவும், நேரங்களை வீணடித்ததாகவும் சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி உயர்மட்ட குழு கூட்டம் நடத்துகிறார். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவுக்கான முதல் விமானம் உக்ரைனில் இருந்து பிப்ரவரி 22ல் தான் புறப்பட்டது. இந்திய மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை மத்திய அரசு நேரம் வீணடித்துள்ளது.

பரிதவிப்பு
தற்போது இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிரமப்படுகின்றனர். உணவு, அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உக்ரைனின் எல்லை பகுதியில் பரிதவிக்கின்றனர். உக்ரைனில் அதிகரித்து வரும் மோசமான சூழலை மாணவர்கள் விவரித்து வருகின்றனர். இந்தியா ஒருபோதும் வன்முறையை அனுமதிக்காது. இதனால் உக்ரைன் விவகாரத்தில் முக்கிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
Recommended Video

பிரச்சனைகளை மறைக்க
உண்மை பிரச்சனைகளை மறைப்பதற்காக வாரிசு அரசியல், தேசப்பற்று என பாஜகவினனர் பேசுகின்றனர். இவை இரண்டுக்கும் காப்புரிமை பெற்றதுபோல் பேசும் பாஜகவில் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியில் இல்லையா. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் மருமகன் முபாசிர் ஆசாத் பாஜகவில் இணைந்தது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். காங்கிரஸில் குலாம்நபி ஆசாத்துக்கு மரியாதை இல்லை என அவர் நினைத்து இருக்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications