மூச்சுவிட முடியாமல் அவதி.. அனுமதி மறுத்த 8 மருத்துவமனைகள்.. இரவு முழுக்க அலைகழிப்பு.. பெரும் சோகம்
மும்பை: கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 49 வயது டாக்ஸி ஓட்டுனரை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மும்பையில் எட்டு மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்து அலைகழித்ததால் , அவர் கடைசியில் உயிரிழந்துவிட்டார் என்று அவரது சகோதரர் குற்றம் சாட்டி உள்ளார்.
நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மும்பையில் உள்ள கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியில் வொர்லியில் சுதர்சன் ராசல் (49வயது) வசித்து வந்தார். வொர்லியில் உள்ள மஹிந்திரா டவர்ஸ் மற்றும் பிரபாதேவி ரயில் நிலையம் இடையே கால்டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவர் வசித்த வார்டில் 388 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. இது மும்பையில் உள்ள எந்தவொரு வார்டிலும் இல்லாத உச்ச பட்ச பாதிப்பு ஆகும்.
இந்நிலையில் சுதர்ஷனுக்கு பொதுவாகவே இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் இருந்தன, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் இருந்தது. அவருக்கு கடந்த சில நாட்களாக லேசான இருமல் இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு, அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அத்துடன் அவர் வாந்தியும் எடுத்தார். இதனால் அவரை கொரானா வைரஸ் தாக்கிவிட்டதாக நினைத்த அவரது குடும்பத்தினர் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் எந்த சோதனையும் இல்லாமல் அவரை பரிசோதித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவருக்கு கொரோனா இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

படுக்கை இல்லை
இது தொடர்பாக சுதர்சனின் தம்பி கூறுகையில்" என் அண்ணணுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வாந்தி வந்தது. நாங்கள் அவரை டாக்ஸியில் கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவருக்கு கொரோனா இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். அங்கிருந்து, நாயர் மருத்துவமனைக்குச் செல்லும்படி எங்களிடம் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் நாயர் மருத்துவனையில் படுகைகள் இல்லை என்று கூறி எங்களை செயின்ட் ஜார்ஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கும் மருத்துவர்கள் கைவிரித்தனர்.

பல மருத்துவமனைகள்
எனது அண்ணனை சரியான நேரத்தில் வென்டிலேட்டரில் வைத்திருந்தால் அவரை உயிருடன் காப்பாற்றி இருப்போம். ஆனால் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் இரவு முழுக்க பல மருத்துவமனையில் அவரை அனுமதிப்பதற்காக சென்றோம். நாயர் மருத்துவமனை, செயின்ட் ஜார்ஜ், கேஇஎம், இஎன்டி மருத்துவமனை, குளோபல், இந்துஜா மற்றும் நானாவதி ஆகிய இடங்களுக்குச் சென்றோம் ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை அனுமதிக்கவில்லை. படுக்கை இல்லை, வெண்டிலேட்டர் இல்லை என்று அனுமதிக்க மறுத்தார்கள்.

மருத்துவர்களிடம் கெஞ்சினோம்
அந்த நேரத்தில் அவரது நிலை மோசமடையத் தொடங்கியது. நாங்கள் மீண்டும் KEM மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை அவர்களிடம் சொன்னோம். ஆனால் மருத்துவர்கள் எதையும் செய்ய முடியாது என்றார். என் அண்ணன் மனைவி அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக ஏதாவது செய்யும்படி அவர்களிடம் கண்ணீர் விட்டு கெஞ்சினார். ஆனால் எதுவும் செய்ய இயலாது என்றார்கள். எதுவும் உதவ முடியாது என்று மருத்துவர்கள் சொன்னால், எங்களைப் போன்ற ஏழைகள் எங்கே போவார்கள்?

உயிர் பிரிந்தது
கடுமையான அலைகழிப்புக்கு பிறகு சனிக்கிழமை காலை 7.30 மணியளவில், 108 ஆம்புலன்ஸை அழைத்தோம் ஆனால் அதுவும் தாமதமாக வந்தது. என் சகோதரர் மிகவும் கஷ்டப்பட்டு சுவாசித்துக் கொண்டிருந்தார், அவர் சிறுநீர் கழிக்க விரும்பினார். நாங்கள் அவரை தூக்கியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது, அதில் இருந்த மருத்துவர் என் அண்ணன் உயிருடன் இல்லை என்றார். என் அண்ணணுக்கு ஒரு எளிய வெண்டிலேட்டர் கிடைத்திருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார். ஆனால் வெண்டிலேட்டர் உள்ள மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் அவர் உயிரிழந்தார் என்றார்.

கொரோனா மருத்துவமனைகள்
மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள், கொரொனா வைரஸ் அறிகுறி நோயாளிகளை அனுமதிப்பதில் தெளிவான கொள்கை இல்லாததே சுதர்சனின் உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தனைக்கு சில மருத்துவமனைகளில் காலியிடம் இருந்திருக்கிறது. ஆனாலும் அவர் அனுமதிக்கப்படவில்லை, சில மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது. மும்பையில் மூன்று மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாகவும் கூறப்படுகிறது. மற்ற மருத்துவமனைகள் கொரோனா அல்லாத நோயாளிளை அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளன. இதுவும் குழப்பத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஸ்வாப் மாதிரி நோ
இந்நிலையில் சுதர்ஷனின் உடல் தொற்று நோய் நெறிமுறையின்படி உடல் சீல் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது, ஆனால் துணியால் எடுக்கப்படவில்லை. முகத்தில் கைக்குட்டைகளை வைத்து, குடும்பத்தினர் சனிக்கிழமை பிற்பகலுக்குள் அவரது உடலை தகனம் செய்தனர். ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்கள் இறந்த உடல்களின் துணிகளை எடுக்க அனுமதிக்காததால், ஸ்வாப் மாதிரி எடுக்கப்படவில்லை என்று நாயர் மருத்துவமனையின் டீன் டாக்டர் ஆர் என் பார்மல் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications