கொரோனா பரவல் குறையவில்லை... பரிசோதனைகளே குறைக்கப்பட்டுள்ளது... தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை குறைவாக நடத்தப்படுவதாலேயே வைரஸ் பாதிப்பு குறைந்ததைப் போல தோற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது.
இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தாக்கரே அரசு முதலில் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியது. இருப்பினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை

144 தடை உத்தரவு
இதையடுத்து வேறு முழு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு வரும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கணிசமாகக் குறைந்து வருவதாகச் சொல்லப்பட்டது.

தேவேந்திர பட்னாவிஸ்
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றும் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாலேயே வைரஸ் பாதிப்பு குறைந்ததைப் போல தோற்றமளிப்பதாகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரிவ், "மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் RT PCR சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் நிகழும் மரணங்களில் சுமார் 20% மரணங்கள் மும்பையில் மட்டும் நிகழ்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

முதல்வருக்குக் கடிதம்
இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதைப் போல பொய்யான தோற்றத்தை உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் சரியான சோதனைகள் மூலம் கொரோனா பாதிப்பின் துல்லியமான தகவல்களை வழங்க முடியும். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்ட போதும் குறைவான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டது.

மிகக் குறைவு
இப்போது இரண்டாம் அலை அதிதீவிரமாக உள்ளது. இப்போதும் குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மும்பையில் சராசரியாக 40,760 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாக்பூர், புனே போன்ற நகரங்களில் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதை விட நான்கு மடங்கு அதிக மக்கள்தொகையைக் கொண்ட மும்பையில் வெறும் 40 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது" என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா கொரோனா பரவல்
மகாராஷ்டிராவில் திங்கட்கிழமை புதிதாக 48,700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும், 71,736 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் 524 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications