நீரவ் மோடி,மெஹூல் சோக்ஸியின் ரூ1,350 கோடி மதிப்பு ஆபரணங்கள்- 108 பெட்டிகள்-அமலாக்கத்துறை பரபர தகவல்
மும்பை: வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ரூ1,350 கோடி மதிப்பிலான ஆபரணங்கள், 108 பெட்டிகளில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Recommended Video
பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்கள் நீரவ் மோடியும் அவரது உறவினரான மெஹூல் சோக்ஸியும். ரூ13,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

லண்டனில் பதுங்கி இருந்த நீரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹூல் சோக்ஸி ஆன்குடிவா நாட்டில் பதுங்கி இருக்கிறார். இருவருக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.
இந்த நிறுவனங்களில் இருந்து ரூ1350 கோடி மதிப்பிலான வைரங்கள், தங்கம், முத்து உள்ளிட்ட ஆபரணங்கள் இந்தியாவுக்கு கொன்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபரணங்கள் 2018-ம் ஆண்டு துபாயில் இருந்து ஹாங்காங்கில் இயங்கி வந்த நீரவ் மோடி அண்ட்கோவின் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது ஹாங்காங்கில் இருந்து இவை அனைத்தும் மும்பைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. மொத்தம் 108 பெட்டிகளில் இந்த ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டன. இதில் 32 பெட்டிகள் நீரவ் மோடிக்கு சொந்தமானவை; எஞ்சியவை மெஹூல் சோக்ஸிக்கு உரியவை என்கின்றன அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள்.
இதேபோல் முன்னரும் துபாய், ஹாங்காங்கில் இருந்து 33 பெட்டிகளில் இருவருக்கும் சொந்தமான ஆபரணங்களை அமலாக்கப் பிரிவினர் கொண்டுவந்தனர். அவற்றின் மதிப்பு ரூ137 கோடி எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications