சூனியக்காரி என குற்றச்சாட்டு.. 77 வயது மூதாட்டியை சிறுநீர் குடிக்க வைத்த அவலம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், 77 வயது மூதாட்டியை சூனியக்காரி என்று குற்றம்சாட்டி, சிறுநீரை குடிக்க வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு 77 வயதான மூதாட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சூனியம் உள்ளிட்ட மாந்தரீக செயல்களில் இவர் அடிக்கடி ஈடுபடுவதாக உள்ளூர் மக்களால் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், கடந்த டிச.30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இந்த மூதாட்டியை ஊர் மக்கள் சிலர் தாக்கி வெளியில் இழுத்து வந்திருக்கின்றனர்.
மூதாட்டியை ஊர் பொதுவில் வைத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். தடியை கொண்டும், கன்னத்தில் அறைந்தும் தாக்கியுள்ளனர். மட்டுமல்லாது சூடான கம்பியை வைத்து கைகளில் சூடு போட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலின் உச்சமாக, மனித சிறுநீரை குடிக்க வைத்திருக்கின்றனர். அதேபோல, நாய் மலத்தையும் சாப்பிட வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தன்மானம் என்பது மிக முக்கியம். அதை இழந்தவர்கள் அனைத்தையும் இழந்ததாகவே உணர்வார்கள்.
மூதாட்டியும் அப்படித்தான் உணர்ந்திருக்கிறார். தற்போது அவரது உடல்நிலையை விட மன நிலைதான் மிக மோசமானதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் மூதாட்டியின் மகனும், மருமகனும் ஊரில் இருக்கவில்லை. வேலைக்காக வெளியூருக்கு சென்றிருந்திருக்கின்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, மிகப்பெரிய கொடூரம் நடந்திருப்பதை உணர்ந்திருக்கின்றனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியருக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் அவர்கள் எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர். புகாரில் மூதாட்டிக்கு நேர்ந்த துயரத்தை விரிவாக கூறியுள்ளனர்.
இந்த புகார் குறித்து பிடிஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அமராவதி காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த், "இந்த குற்றச்சாட்டு மிக தீவிரமானது. சம்பவம் நடந்துள்ள பகுதி வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. விசாரணைக்கு காவலர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றத்தை மறைக்க சிலர் முயன்று வருவதாகவும் சொல்லப்படுகிறது, அது குறித்தும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கல்வியறிவு அதிகம் கொண்ட முதல் 10 மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால், அந்த மாநிலத்திலேயே மூடநம்பிக்கைகள் குறித்து பிரச்சனைகள் எழுந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டிலேயே மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நரபலி, அகோரி நடைமுறைகள், சூனியம் உள்ளிட்டவை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்த மாநிலத்தில் மூடநம்பிக்கை பழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக கூறி மூதாட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications