அதிகாரிகள் இடமாற்றத்தில் அலட்சியம்- மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசை கடுமையாக சாடிய தேர்தல் ஆணையம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் இடம் மாற்றப்பட வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வரும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசை இந்தியத் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மதிக்காமல் மகாராஷ்டிரா அரசு செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் சாடியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஜரூராக இறங்கிவிட்டன.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பெரும்பாலான அதிகாரிகள், காவல்துறையினரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தங்களது இந்த உத்தரவை மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என முதலில் அதிருப்தியை தெரிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். அத்துடன் மகாராஷ்டிரா மாநில அரசு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரை மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டித்திருக்கிறது.
அத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று இடம் மாறுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அப்படியான அறிக்கைய சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கோபத்துக்கு காரணம்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மாநில அரசு மதிக்காமல் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைகளை பாதிக்கக் கூடியவகையில் மகாராஷ்டிரா அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய செயல்பாடு அற்ற தன்மையை ஏற்க முடியாது எனவும் சாடியுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications