100 வீடியோக்கள்.. சிக்கும் விஐபிக்கள்.. போலி சாமியாரின் கோவிலுக்கு 1 கோடி அரசு ஒதுக்கியது அம்பலம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் பிரபல போலி சாமியார் அசோக் காரத் பல பெண்களிடம் அத்துமீறியது உறுதியாகி உள்ளது. 100க்கு மேற்பட்ட வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அசோக் காரத்துக்கும் மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சாகன்கருக்கும் தொடர்பு இருப்பதாக வீடியோக்கள் பரவி வருகிறது. இது தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் போலி சாமியார் அசோக் காரத்தின் கோவிலுக்கு மகாராஷ்டிரா அரசு ஒரு கோடி ஒதுக்கியது அம்பலமாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் பிரபல போலி சாமியார் அசோக் காரத். இவரிடம் அம்மாநில அமைச்சர்கள், உள்பட பல அரசியல் தலைவர்கள் ஜோதிடம் பார்க்கச் சென்றுள்ளனர். அதேபோல் அதிகாரிகளும் அசோக் காரத்துடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் மீது 35 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

பல பெண்களை ஏமாற்றினார்
விசாரணையில் அவர் பூஜை, பரிகாரம் செய்வதாகக் கூறி பல பெண்களை அவரது அலுவலகத்தில் வசியம் செய்து பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இது தொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. போலீசார் போலி சாமியார் பல பெண்களிடம் லீலையில் ஈடுபடும் சுமார் 100 ஆபாச வீடியோக்களைக் கைப்பற்றி உள்ளார்கள்.
போலி சாமியாருடன் மூத்தஅமைச்சர்கள் உள்பட பல அரசியல் தலைவர்கள் தொடர்பில் இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலி சாமியாருக்கும், மந்திரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஒரு கோடி ஒதுக்கியது அம்பலம்
இந்தநிலையில் போலி சாமியார் அசோக் காரத் தலைவராக உள்ள நாசிக் சின்னாரில் உள்ள ஈசனேஸ்வர் கோவிலுக்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள கடந்த 2018-ம் ஆண்டு ரூ.1 கோடியே 5 லட்சம் ஒதுக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவைச் சேர்ந்த சேர்ந்த ஜெய்குமார் ராவல் அமைச்சராக இருந்தபோது சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோவிலில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.25 லட்சம் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மகளிர் ஆணையத் தலைவி ராஜினாமா
இதனிடையே இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்பமாக, மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ரூபாலி சாகன்கர் சர்ச்சையில் சிக்கி உள்ளார். போலி சாமியாருடன் இருக்கும் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, ரூபாலி சாகன்கரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தன. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம்
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த வழக்கு குறித்து பேசும் போது, இந்த வழக்கை விசாரிக்க ஒரு பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் போலி சாமியார அசோக் காரத் "மந்திர நீர்" கொடுத்துப் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பமானபோது அவருக்குக் கட்டாயக் கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்ததாகவும் புகார்கள் வந்துள்ளது என்று கூறினார்.
10 வழக்குகள்
அசோக் காரத் மீது இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களை ஏமாற்றிப் பலமுறை பலாத்காரம் செய்தல், வீடியோக்களை வைத்துப் பெண்களை மிரட்டியது, ஒரு பெண்ணின் சம்மதமின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்தது. உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்தது, மதச் சடங்குகள் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி ஏமாற்றியது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோக்களை நீக்க உத்தரவு
போலி சாமியார் அசோக் காரத்தின் போலீஸ் காவல் மார்ச் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சாமியாருக்கு உதவிய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா அரசு உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications