இந்தியை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. மதம் மாறியவர்களின் SC சான்றிதழை ரத்து செய்யும் மகாராஷ்டிரா அரசு!
மும்பை: இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, இந்தி மொழியை திணிப்பதாக மகாராஷ்டிரா பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதனை தொடர்ந்து தற்போது, பட்டியல் சாதி சான்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் புதிய சலசலப்புகளை கிளப்பியுள்ளது.

பட்டியல் சாதி இடஒதுக்கீடு என்பது இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை சுட்டிக்காட்டியிருந்த பட்னாவிஸ், இதை மீறி மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழை பெற்றிருப்பின் அது போலியானது என்றும், அப்படி பெற்று, அதன் மூலம் சலுகைகளை அனுபவிக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்னாவிஸ் கூறியுள்ளார்.
போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலை போன்ற இட ஒதுக்கீடு பலன்களைப் பெற்றிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலியான சான்றிதழை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், அந்த தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்படும் என்றும் சட்டமன்ற மேலவையில் பட்னாவிஸ் கூறியுள்ளார்.
கூடுதலாக, கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி மதமாற்றம் செய்வதை தடுக்க கடுமையான சட்ட விதிகளை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ அமித் கோர்கே கூறுகையில்,
"மத சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சிலர் பட்டியல் சாதி பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பலன்களை அனுபவித்து வருகின்றனர். போலியான சாதி சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலன்களைப் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் சித்ரா வாக் பேசுகையில், "கணவனின் மதத்தை மறைத்து பெண்களை திருமணம் செய்யும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சாங்கிலியில் ஒரு பெண் கிறிஸ்தவ மதத்தை ரகசியமாக பின்பற்றும் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு, மதத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இதனால் அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது இறந்துவிட்டார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். விருப்பத்துடன் மதமாற்றம் செய்யலாம். ஆனால், கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற வழக்குகளை கையாள டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்து, பலவந்தமாகவோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்வதைத் தடுக்க புதிய சட்ட விதிகள் கொண்டுவரப்படும். மேலும், இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், இது மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை விட கடுமையானதாக இருக்கும் என்றும் உள்துறை அமைச்சர் பங்கஜ் போயர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications