பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி.. அடுத்தடுத்து பறிபோன 4 உயிர்கள்.. மர்ம மரணத்தின் பின்னணி என்ன?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பிரியாணி சாப்பிட்டு, சற்று நேரத்தில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியாத சூழலில், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த காலத்தில் உணவு மீதான மோகம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் உணவுகளை சாப்பிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இப்போது அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறார்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பைதோனி என்ற பகுதியில் தான் இந்த மர்ம உயிரிழப்பு நடந்துள்ளது. அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த நகரத்தையுமே உறைய வைத்திருக்கிறது. இரவு உணவுக்கும் அதிகாலை மரணத்திற்கும் இடையே நடந்த அந்த சில மணி நேரப் போராட்டம் குறித்த தகவல் வெளியாகி நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது.
நள்ளிரவில் நடந்தது என்ன?
கடந்த ஏப்ரல் 25ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்றிரவு, அப்துல்லா டொகாடியா (40) என்பவரது வீட்டில் உறவினர்கள் சூழ மகிழ்ச்சியான இரவு உணவு உபசரிப்பு நடந்துள்ளது. மொத்தம் 9 பேர் அமர்ந்து, இரவு 10:30 மணி அளவில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்து உறவினர்கள் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால், நள்ளிரவு 1:00 மணியிலிருந்து 1:30 மணிக்குள் அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய நான்கு பேர் மட்டும் தர்பூசணிப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் தான் ஏப்ரல் 26 அதிகாலை 5:30 மணி அளவில், தர்பூசணி சாப்பிட்ட அந்த நான்கு பேருக்கும் கடும் வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமானதால் அவர்கள் உடனடியாக அருகே உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர்கள் சிகிச்சை பலனில்லாமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து உயிரிழப்பு
முதலில் காலை 10:15 மணிக்கு 13 வயது சிறுமி ஜைனப் உயிரிழந்தார்.. அடுத்து இரவு 10:30 மணிக்கு தந்தை அப்துல்லா உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே தாய் நஸ்ரின் மற்றும் மூத்த மகள் ஆயிஷாவும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மறைந்தனர். இப்படி ஒரே குடும்பத்தில் நான்கு பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரியாணி சாப்பிட்ட மற்ற 5 உறவினர்களுக்கு ஏதும் ஆகாத நிலையில், நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் மட்டும் பலியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தர்பூசணியில் எதாவது கலக்கப்பட்டிருந்ததா அல்லது பிரியாணிக்கும் தர்பூசணிக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்வினையா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போது தற்செயலான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனம் தேவை
கோடைக் காலம் தொடங்கிவிட்டதால், குளிர்ச்சிக்காக நாம் வாங்கும் பழங்கள் மற்றும் வெளி உணவுகளில் அதீத கவனம் தேவை. இறைச்சி உணவுகளைச் சாப்பிட்ட உடனே பழங்கள் அல்லது பால் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வெட்டி வைக்கப்பட்ட பழங்களை வாங்குவதை தவிருங்கள்.. பழங்களை நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்தவும். இருப்பினும், சந்தோஷமாகச் சாப்பிட்ட ஒரு இரவு உணவு, ஒரு குடும்பத்தையே பலி வாங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications