கொரோனா.. வெளிநாட்டினரை அரசு பலிகடா ஆக்கிவிட்டது.. தப்லீக் ஜமாத் வழக்கில் மும்பை ஹைகோர்ட் விளாசல்!
மும்பை: தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு வந்த வெளிநாட்டினர்தான் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறுவது தவறு, இந்த வெளிநாட்டினரை அரசு பலிகடா ஆக்கிவிட்டது என்று மும்பை ஹைகோர்ட் விளாசியுள்ளது. இவர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கையும் மும்பை ஹைகோர்ட் நீக்கியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவிய தொடக்க நாட்களில் டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டம் காரணமாக நாட்டில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8 முதல் மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது. இதில் 1500 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு உள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவ இது மட்டுமே காரணம் இல்லை.
மகாராஷ்டிரா எப்படி
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டு நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. இவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இவர்களின் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 30 பேர் மீது இந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
வாதம்
இந்த வழக்கிற்கு எதிராக இந்தோனேசியா, பெனின், தான்சானியா, கானா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தப்லீக் ஜமாத் பயணிகள் வழக்கு தொடுத்தனர். மும்பை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் தப்லீக் ஜமாத் இயக்கம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான புகார்களை வைத்தார்.
கடும் பிரச்சாரம்
பொது முடக்கத்தை மீறி இவர்கள் கூட்டத்தை நடத்தி உள்ளனர். இவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வில்லை. பொது மக்களிடம் சென்று இவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதன் மூலமே இவர்களால் மக்கள் இடையே கொரோனா பரவியது, என்று அரசு தரப்பு வாதம் வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.வி.நலவடே, எம்.ஜி.செவ்லிகா் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு
அதில் அரசு வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இந்த கூட்டம் பல வருடங்களாக நடக்கிறது. இது ஒன்றும் மதம் மாற்றும் கூட்டம் இல்லை. இந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் மத மாற்றம் செய்ய செல்லவில்லை. அதோடு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறித்து பொய்யான தகவல்களை செய்திகளை பரப்பிவிட்டனர்.
கேஸ்கள் உள்ளது
இவர்கள்தான் கொரோனா பரவலுக்கு காரணம் என்று எப்படி சொல்கிறீர்கள்? இப்போது நாட்டில் எத்தனை கேஸ்கள் உள்ளது தெரியுமா? கொரோனா பரவலுக்கு இவர்கள் மீது பழியை போட்டு, இவர்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா பரவலுக்கு இந்த குழுவினரை அரசு பலிகடா ஆக்கிவிட்டது. இதில் அரசு, போலீஸ் என்று எல்லோரும் இந்த குழுவினருக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். அதனால் இவர்கள் மீது போடப்பட்டு இருக்கும் வழக்கை ரத்து செய்கிறோம், என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.