லஞ்ச ஊழல்...காக்னிசன்ட் நிறுவனத்தின் மீது முன்னாள் ஊழியர் வழக்கு...தொடரும் சர்ச்சை...!!
மும்பை: இந்தியாவில் நடந்த லஞ்ச ஊழலில் பங்குதாரர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் தற்போதைய போர்டு உறுப்பினர்கள், செயல் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் மீது அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காக்னிசன்ட் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் ரவீந்திர கய்யாலா. இவர் தான் அமெரிக்காவின் டெலவேர் மாவட்ட நீதிமன்றத்தில் காக்னிசன்ட் மீது வழக்கு தொடுத்துள்ளார். இவர் மட்டுமின்றி மற்ற பங்குதாரர்களும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இதற்குக் காரணம், லஞ்ச ஊழல் மற்றும் பங்குதாரர்களை தவறாக வழி நடத்தியது.

இந்த மனுவில், இந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பிரான்சிஸ்கோ டி சவுஸா, தற்போதைய சிஇஓ கரென் மிக்ளவ்ளின், முன்னாள் தலைவர் கோர்டன் கோபர்ன், முன்னாள் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஈ ஸ்வார்ட்ஸ், தற்போதைய சிஇஓ பிரைன் ஹம்ப்ரீஸ் உள்பட போர்டு உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கில் தனது புகாராக ரவீந்திரா தெரிவித்து இருப்பது, ''சென்னையில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக, தவறான அறிக்கைகள் கொடுத்து, லஞ்சப் பணம் கொடுத்த தகவல்களை மறைத்துள்ளனர், இவர்கள் அனைவருக்கும் நிறுவனத்தில் நடந்து வந்த அனைத்து செயல்பாடுகளும் தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இல்லை. அனைவரும் நிறுவனத்தின் நல்ல பதவியில் இருந்தவர்கள். எனவே, நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும். மேலும், போர்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய பங்குதாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் போர்டு உறுப்பினர்கள்தான் இழப்புக்கு காரணம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் 2014ல் புதிய அலுலகம் எழுப்புவதற்கு கான்ட்ராக்டருக்கு ரூ. 2 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்தாக காக்னிசன்ட் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பணத்துக்கான அனுமதியை அமெரிக்காவில் இருக்கும் தலைமை காக்னிசன்ட் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளால் வழங்கப்பட்டது என்று அமெரிக்க செக்யூரிட்டீஸ் மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் மூலம் தெரிய வந்தது. இந்த கமிஷன்தான் இதுகுறித்து 2014 - 2016 கால கட்டத்தில் விசாரணை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் கான்ட்ராக்டருக்கு மறைமுகமாக 2.5 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டது மறைக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து காக்னிசன்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோர்டன் கோபர்ன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். ஆனால், 2019ல் இந்தக் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது மறுக்காமல் காக்னிசன்ட் வழக்கை தீர்த்துக் கொண்டது. தோராய மதிப்பிழப்பாக 19 மில்லியன் டாலர் மற்றும் முன்தீர்ப்பு வட்டியாக 6 மில்லியன் டாலர் கொடுத்து காக்னிசன்ட் தீர்த்துக் கொண்டது என்ற தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications