என்சிபி தலைவர் பாபா சித்திக் சுட்டு கொலை! மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பு! 3 பேரை கைது செய்து விசாரணை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸில் முக்கிய சக்தியாக வளம் வந்தவர் பாபா சித்திக், மகாராஷ்டிரா பொருத்தவரை காங்கிரஸின் பலம் பொருந்திய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை வகித்த அவர் கட்சியிலும் ஆட்சியிலும் மிகவும் பிரபலமான நபராக அறியப்பட்டார்.
சுமார் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர் மக்களிடையேயும் கட்சியினர் இடையேயும் பெரும் செல்வாக்கு பெற்றவர். குறிப்பாக ஆண்டுதோறும் மும்பையில் இப்தார் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிற கட்சி பிரமுகர்களை கலந்து கொள்ள வைத்ததன் மூலம் சமூக நல்லிணக்க தலைவராகவும் ஈடுபட்டார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் அவரது பணிகள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (அஜித் பவர்) இணைந்தார். இந்த நிலையில் மும்பையில் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த பாபா சித்திக் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் பாபா சித்திக் படுகொலை மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சித்திக்கின் படுகொலை செய்தியை கேட்ட மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அவர் அனுமதிக்கப்பட்ட லீலாவாடி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தற்போது கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications