நேற்று சிவசேனையின் தளபதி.. இன்று பாஜகவால் "ராஜாவான" ஆட்டோ ஓட்டுநர்.. யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
மும்பை: ஆட்டோ டிரைவராக இருந்து மகாராஷ்டிர மாநில அமைச்சராக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யார் இவர் என்பது பற்றி சுவாரஸ்ய பின்னணி தகவல்களைப் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.
கோவா ஓட்டலில் “குத்தாட்டம்” - ஏக்நாத் ஷிண்டே முதல்வராவதை அடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜாலி
இதையடுத்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்கள் ஒரு வாரம் தங்கியிருந்து உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்தார். உத்தவ் தாக்கரே சட்டசபை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.
சிவசேனா எம்எல்ஏக்கள்
ஏக்நாத் ஷிண்டேவிடம் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் இருப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என ஃபட்னவீஸ் தெரிவித்தார். இதையடுத்து மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
ராஜினாமா
இதையடுத்து ராஜினாமா செய்யும் முடிவை உத்தவ் தாக்கரே எடுத்தார். இதையடுத்து நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரே அளித்தார். அதை ஆளுநர் மாளிகை ஏற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யார் மகாராஷ்டிராவின் முதல்வராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே
இந்த நிலையில் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிராவில் கடந்த 10 நாளாக புயலை கிளப்பிய இந்த ஏக்நாத் ஷிண்டே யார் என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிரா
ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஷிண்டே சிவசேனாவின் அமைச்சராக வெகு தூரம் பயணித்துள்ளார். இவர் மகாராஷ்டிராவில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருப்பவர். அவர் தானேவில் கோப்ரி- பச்பகாடியின் எம்எல்ஏவுமாவார். இவர் இரு முறை தானே மாநகராட்சியின் உறுப்பினராக பதவி வகித்தவர். அது போல் 3 ஆண்டுகளுக்கு நிலைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 4 ஆண்டுகளாக சட்டசபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.
லோக்சபா எம்பி
இவர் 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி பிறந்தார். இவர் 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு லதா ஏக்நாத் ஷிண்டே என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஸ்ரீகாந்த் ஷிண்டே என்ற மகன் உள்ளனர். ஸ்ரீகாந்த் எலும்பியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர். அது மட்டுமல்லாமல் அவர் கல்யாண் தொகுதியில் லோக்சபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எம்எல்ஏ
2009, 2014 ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே 2014 ஆம் ஆண்டு பொதுப் பணித் துறை உறுப்பினராக இருந்தார். மேலும் சிவசேனா கட்சியின் தலைவராக 2018இல் தேர்வு நியமிக்கப்பட்டார். சிவசேனாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர் ஏக்நாத். கட்சித் தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர் ஏக்நாத்.
அமைச்சர் பதவி
இவர் 1999 ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலிலும் 2004 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்றார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வென்றார். தாக்கரே குடும்பத்தின் அரசியல் முடிவுகளால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் காத்திருந்தார். ஆனால் உத்தவ் தாக்கரே முதல்வரானதால் ஷிண்டேவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
ஷிண்டே அதிருப்தி
இதனால் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஷிண்டே அதிருப்தியில் இருந்துள்ளார். எனினும் வேறு வழியில்லாமல் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவராகவே இருந்துள்ளார். ஆனால் அமைச்சர் பதவியிலும் உத்தவ் தாக்கரே எடுத்தது ஷிண்டேவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ஆம் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுப் பணித் துறையில் உத்தவ் தாக்கரேவின் தலையீடுகள் அதிகம் இருந்தன.
முதல்வரானார் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் மீது அதிருப்தியில் இருப்பதும் அவருக்கு நிறைய எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதையும் பாஜக அறிந்து கொண்டது. இதையடுத்து ஷிண்டைவை வைத்தே சிவசேனா அரசை கலைக்க ஆட்டத்தை பாஜக ஆரம்பித்தது. இதையடுத்து முதல்வர் பதவி மீது இருந்த மோகத்தாலும் உத்தவ் தாக்கரே மீதான கோபத்தாலும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் வலையில் சிக்கினார். பின்னர் 39 எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அஸ்ஸாமில் தங்கியிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவுடன் இன்று ஏக்நாத் முதல்வரானார்.