ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.. விவாகரத்துக்கு பின் சாஹல் எக்ஸ் மனைவி தனஸ்ரீ போட்ட பதிவு!
மும்பை: வாழ்க்கையில் இருந்த அழுத்தம் ஒரே நாளில் ஆசீர்வாதமாக மாறிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் முன்னாள் மனைவி தனஸ்ரீ பதிவிட்டுள்ளார். மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் சாஹல் - தனஸ்ரீ தம்பதி விவாகரத்து பெற்ற நிலையில், அவர்கள் கடந்த 18 மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டவர் சாஹல். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல், ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்பின்னர் என்ற புதிய வரலாற்றையும் படைத்தார். இருந்தாலும் இந்திய அணியில் தொடர்ச்சியாக சாஹல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே சாஹலின் குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன. சாஹல் மற்றும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மா இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்து பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. மருத்துவராக தனஸ்ரீ வர்மா யோகா மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது கொரோனா காலத்தில் தன்னிடம் பயிற்சிக்கு வந்த சாஹலுடன் காதலில் விழுந்தார்.
சாஹலை திருமணம் செய்த பின் அவர் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை மில்லியனை கடந்தது. ஒரு கட்டத்தில் டான்ஸ் ஷோ, சினிமா என்று தனஸ்ரீ தனது பாதையை திருப்பினார். இதனிடையே தனஸ்ரீ வர்மா தனது ஆண் நண்பர்கள் உடனான நெருக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் சாஹலை தனஸ்ரீ விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகின.
ஏற்கனவே இருவரும் இன்ஸ்டாகிராம் Unfollow செய்த நிலையில், கிட்டத்தட்ட விவாகரத்து செய்வது உறுதியாகியது. இந்த நிலையில் மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருவரும் விவாகரத்து பெற்று கொண்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் அழுத்தத்தில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்டது வரை.. நம் சோகங்கள், கஷ்டங்களை கடவுள் எப்படி ஆசீர்வாதமாக மாற்றுகிறார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறீர்கள் என்றால், அந்த முடிவு சில நேரங்களில் கவலையை கூட அளிக்கலாம். சில நேரங்களில் அனைத்தையும் கடவுள் பார்த்துகொள்வார் என்று விட்டுவிட்டு பிரார்த்தனை செய்யலாம்.
நமக்கான நன்மையை கடவுள் சரியான நேரத்தில் செய்வார் என்று வைக்கும் நம்பிக்கைக்கு சக்தி உள்ளது என்று கூறப்பட்டுள்ளார். தனஸ்ரீ வர்மாவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இருந்தாலும் தனஸ்ரீ வர்மா - சாஹல் இருவரும் இதுவரை விவாகரத்து குறித்த எந்த காரணத்தையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் அவர்கள் இருவரும் கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications