"லியோவை" வியந்து பார்க்கும் மும்பை.. 3 மணி நேரத்தில் இப்படியொரு சம்பவமா! எங்கு பார்த்தாலும் பாராட்டு
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் "லியோ"வால் ஒரு சூப்பர் சம்பவம் நடந்துள்ளது. இதனால் மும்பைவாசிகள் அனைவரும் லியோவை பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.
இந்தியாவில் குழந்தை கடத்தல் என்பது மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது. கடத்தப்படும் குழந்தைகள் எங்கோ ஓர் இடத்தில் விற்கப்படுவதும், மிக மோசமான தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

குழந்தை கடத்தல் சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
மழை: சில நேரங்களில் கடத்தல்காரர்கள் திட்டமிட்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கடத்திவிடுகிறார்கள். இன்னும் சில சமயம் குழந்தைகள் தெரியாமல் வீடுகளைத் தாண்டி வெளியே ரொம்பவே தூரம் வந்துவிட்டால் அவர்களையும் குறிவைத்துத் தூக்கிவிடுகிறார்கள். இதற்கிடையே மகாராஷ்டிராவில் வீட்டில் இருந்து எதிர்பாராத விதமாக மாயமான குழந்தையை வெறும் 3 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு "லியோ" என்ற நாய் போலீசாருக்கு உதவி இருக்கிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை அடுத்துள்ள புறநகர்ப் பகுதிதான் போவாய்.. இங்கே ஆறு வயது சிறுவன் மாயமான நிலையில், அவனை வெறும் போலீசார் 3 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் போலீசாரை அணுகிய நிலையில், அவர்கள் 'லியோ' என்ற மோப்ப நாய் உதவியுடன் மாயமான குழந்தையை சில மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிலையில், இது குறித்த தகவல்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது.
மாயமான குழந்தை: கடந்த வாரம் நவம்பர் 23ஆம் தேதி, மும்பையின் புறநகர்ப் பகுதியான போவாய் என்ற பகுதியில் உள்ள அசோக் நகர் குடிசைப் பகுதியில் இந்த 6 வயது சிறுவன் மாயமாகியுள்ளான். தனது குடிசை வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இந்த குழந்தை திடீரென காணாமல் போனது. நீண்ட நேரமாகியும் குழந்தை வீட்டுக்கு வராத நிலையில், தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் குழந்தை மாயமாகியுள்ளதையே அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த குடிசை பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், அவன் எங்கே போனான் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னரே குழந்தையைக் கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
சம்பவம் செய்த லியோ: அதன்படி உடனடியாக மும்பை போலீசில் இருக்கும் "லியோ" என்ற நாயைக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். 6 வயதுக் குழந்தையின் டீ சர்ட்டை மோப்ப நாய்க்குக் கொடுத்த போலீசார், குழந்தையைத் தேடும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். டீ சர்ட்டை மோப்பம் பிடித்த குழந்தை முதலில் அங்கும் இங்கும் சுற்றி இருக்கிறது.
பிறகு நேராக அருகே இருக்கும் கிரவுண்டிற்கு சென்ற அந்த நாய், அங்கே இருந்த குழந்தையைக் கண்டுபிடித்துள்ளது. வீட்டில் இருந்து சுமார் அரை கிமீக்கு மேல் வந்துவிட்ட அந்த குழந்தையைத் துல்லியமாக அந்த மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது. மாயமான அந்த குழந்தை அம்பேத்கர் உத்யன், அசோக் டவர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். துரிதமாகச் செயல்பட்டு குழந்தையைக் கண்டுபிடித்த போலீசாரையும், அவர்களுக்கு உதவிய "லியோ" நாயையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications