விராட்கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்.. பொறியியல் பட்டதாரி சிக்கினார்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா வெறும் கையோடு நடையை கட்டியது.
அதுவும் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. நமது அணியின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய இந்திய வீரர்களை குறிவைத்து சிலர் சமூக வலைத்தளத்தில் அருவருப்பாக பேசினார்கள்.

மதரீதியாக விமர்சனம்
அந்த போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய பவுலர் முகமது ஷமியின் குடும்பத்தை பற்றியும், மதரீதியாகவும் கடுமையாக தாக்கினார்கள். முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஆதரவாக கருத்துகளை வெளியிட்டனர்.
''எந்த நபருடனும் நேரில் பேச தைரியம் இல்லாத முதுகெலும்பு அற்றவர்கள்தான் இப்படி கூறுவார்கள்' நாங்கள் எப்போதும் ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்கிறோம்'' என்று விராட் கோலி கூறினார்.

விராட் கோலியின் குழந்தைக்கு மிரட்டல்
ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அவருக்கு பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒருவர் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் கருத்து கூறியிருந்தார். இந்த அவருவருப்பான செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த டெல்லி மகளிர் ஆணையம் ''கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து நாம் வெட்கப்பட வேண்டும், இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.

கைது செய்தனர்.
விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரின் டுவிட்டர் ஐ.டி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். பாகிஸ்தான் அணி ரசிகர் ஒருவர்தான் மிரட்டல் விடுத்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் விராட் கோலியின் குழந்தைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ராம் நாகேஷ் சீனிவாஸ் அகுபதினி என்பவரை போலீசார் கைது செய்தனர். 23 வயதான ராம் நாகேஷ் சீனிவாஸ் பொறியியல் பட்டதாரி ஆவார்.

தீவிர விசாரணை
அவர் ஹைதராபாத்தை சேர்ந்த வலது சாரி ஆதரவாளர் என தெரியவந்தது. ஹைதராபாத்தை சென்று ராம் நாகேஷ் சீனிவாசை கைது செய்த போலீசார் அவரை மும்பை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications