விநாயகர் சதுர்த்திக்கு இது கெட்டதுன்னா மிலாது நபிக்கும் கெட்டதுதான்.. மும்பை ஐகோர்ட் அதிரடி கருத்து!
மும்பை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது அனுமதிக்கப்பட்ட சத்தத்திற்கு மேல் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிப்பது என்றால், மிலாதுன் நபி ஊர்வலங்களிலும் அதே தான் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் டெசிபல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அதிக சத்தம் ஏற்படுத்தும் ஒலி அமைப்புகளையும், லேசர் விளக்குகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதைத் தவிர்க்குமாறும், அவற்றை பயன்படுத்த தடை விதிக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனோ அல்லது ஹதீஸ்களோ டிஜே டான்ஸ் மற்றும் லேசர் விளக்குகளை கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முன்னதாக, பொது விழாக்களின் போது ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒலியை வெளியிடும் ஒலி அமைப்புகள் மற்றும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மனுதாரர்களின் வக்கீல் ஓவைஸ் பெச்கர், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் ஈத் பண்டிகையையும் சேர்க்க வேண்டும் என்று வாதம் வைத்தார். "பொது விழாக்கள்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளதால் ஈத் என தனியாக சேர்க்க தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
விநாயக சதுர்த்திக்கு, அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை தீங்கு விளைவிக்கிறது என்றால், ஈத் பண்டிகைக்கு பய்னபடுத்தினாலும் அவை தீங்கு தான் விளைவிக்கும் எனத் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், லேசர் விளக்குகளின் பயன்பாடு குறித்து, மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லேசர் லைட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொதுநல மனு தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் அடிப்படை ஆராய்ச்சி செய்ய வேண்டும். பயனுள்ள வழிகாட்டுதலை வழங்க நீதிமன்றத்திற்கு மனுதார்கள் உதவ வேண்டும். நாங்கள் நிபுணர்கள் அல்ல. லேசரின் 'எல்' கூட எங்களுக்குத் தெரியாது. அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலன்றி, அத்தகைய பிரச்சினையை நாங்கள் எவ்வாறு தீர்ப்பது?" எனக் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications