‛‛இந்த மனசு தான் சார் கடவுள்’’.. இந்திய அணி பேரணியில் மயங்கிய பெண்! போலீஸ் அதிகாரி செய்ததை பாருங்க!
மும்பை : டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நேற்று நாடு திரும்பினர். இதையடுத்து வெற்றி கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் பஸ்சில் மும்பையில் ஊர்வலம் சென்றனர். இந்த வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுவிட முடியாமல் மயங்கிய பெண்ணை தோளில் சுமந்து சென்று போலீஸ் அதிகாரி காப்பாற்றிய வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிசி 20 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதி போட்டி கடந்த 29 ம் தேதி நடந்தது. மேற்கிந்திய தீவின் பார்படாஸ் மைதானத்தில் இந்திய அணி -தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருட இடைவெளியில் மீண்டும் இந்திய அணி டி20 உலககோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவில் இருந்து கோப்பையுடன் நாடு திரும்ப தயாராகினர். ஆனால் பார்படாஸில் கடும் புயல் வீசியது. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் உருவானது. புயலால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் புயல் கரையை கடந்த நிலையில் 2ம் தேதி இரவு பார்படாஸ் விமானநிலையத்தில் இருந்து இந்திய வீரர்கள் தனி விமானத்தில் புறப்பட்டு அமெரிக்கா வழியாக நேற்று நாடு திரும்பினர். விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். விமான நிலைய பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அதன்பிறகு ஐடிசி மவுரியா ஓட்டலில் சற்று ஓய்வெடுத்தனர். பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து கோப்பையை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். அதன்பிறகு நேற்று மாலையில் மும்பையில் இந்திய அணி வீரர்களின் வெற்றி ஊர்வலம் தொடங்கி 2 மணிநேரம் நடந்தது.
அதாவது மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, இந்திய அணி வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இந்திய அணி வீரர்கள் பஸ்சின் மேல்புறம் வெற்றி கோப்பையுடன் உற்சாகமாக ஊர்வலம் சென்றனர். இந்த வேளையில் பல லட்சம் ரசிகர்கள் திரண்டு இந்திய வீரர்களை வரவேற்றனர்.

ரசிகர்களின் கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் சிக்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது இந்திய அணி வீரர்கள் ஊர்வலம் சென்றபோது ரசிகர்களின் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் ஒருவர் சிக்கி திடீரென்று மயங்கினார். இதனை கவனித்த போலீஸ் அதிகாரி உடனடியாக அந்த பெண்ணுக்கு உதவி செய்தார்.
அதாவது கூட்ட நெரிசலில் நடப்பதே சிரமமாக இருந்த நிலையில் போலீஸ் அதிகாரி மயங்கிய பெண்ணை தூக்கி தனது தோளில் சுமந்தபடி அவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த போலீஸ் அதிகாரியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications