இஸ்ரோவில் சம்பளம் எவ்வளவு? பதிலை கேட்டதும் சட்டென கிளம்பிய ஐஐடி மாணவர்கள்.. சோம்நாத் வேதனை
மும்பை: ஐஐடி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இஸ்ரோவில் இணைந்து வேலை செய்வது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டெக்ஃபெஸ்ட் என்ற நிகழ்வு நடத்தப்படும்.. அதன்படி இந்தாண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கலந்து கொண்டார்.

ஐஐடி மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஐஐடி மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரோ: சோம்நாத் தனது உரையில் இஸ்ரோ அமைப்பின் வரும் கால திட்டங்கள் குறித்து விவரித்தார்.. மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், நிலவை ஆய்வு செய்யும் அடுத்தகட்ட சந்திரயான் திட்டம் ஆகியவை குறித்து விவரித்தார். வரும் காலத்தில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களைக் குறித்தும் அவர் விளக்கினார். வரும் 2047 வரை இஸ்ரோ திட்டங்கள் என்ன என்பதை அவர் விளக்கினார்.
இஸ்ரோ விண்வெளியில் தனக்கென தனியாக 2035ஆம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் 2028இல் தொடங்க உள்ளது. அது குறித்தும் சோம்நாத் தனது உரையில் விளக்கினார். இஸ்ரோ தனது திட்டங்களுக்காக நாடு முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் சோம்நாத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு: குறிப்பாக மெடிரியல் சயின்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் மும்பை ஐஐடி தனது நிபுணத்துவத்தை தங்களுக்கு வழங்கலாம் என்றும் சோம்நாத் தெரிவித்தார். தனது உரைக்குப் பிறகு சோம்நாத், மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர் இஸ்ரோ நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அதில் எப்படிச் சேரலாம் என்றும் கேட்டார்.
அப்போது அவர் அளித்த பதில் தான் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதாவது தனது குழு ஒரு சமயம் இஸ்ரோவுக்கு காலியிடங்களை நிரப்ப ஐஐடி கல்லூரி சென்றதாகவும் அங்கே இஸ்ரோவில் கிடைக்கும் ஊதியம் குறித்துக் கேட்ட தெரிந்தவுடன் 60% மாணவர்கள் வெளியேறிவிட்டதாகக் கூறியிருந்தார். மாணவர்கள் நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் சர்வதேச வேலைகளுக்கு மட்டும் முன்னுரிமை தருவதாகத் தெரிவித்தார்.
ஐஐடி மாணவர்கள் இந்திய விண்வெளி துறையில் தங்கள் பங்களிப்பைத் தர வேண்டும் என்ற அவர், இஸ்ரோவில் கிடைக்கும் தனித்துவமான வாய்ப்புகள் மற்றும் தாக்கத்தைக் குறித்தும் விளக்கினார்,
சந்திரயான்-3: மேலும், இஸ்ரோவின் சமீபத்திய சாதனைகளை விளக்கிய சோமநாத், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து விளக்கினார். மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவை புவி நுண்ணறிவு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்பு ஆகியவை தொடர்பாக இருக்கும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.
இஸ்ரோ செலுத்தும் ராக்கெட்கள் பெரிதாகிக் கொண்டே வரும் நிலையில், புதிய ஏவுதளத்தின் அவசியத்தையும் அவர் விளக்கினார். ராக்கெட்கள் பெரிதாகிக் கொண்டே இருக்கும் நிலையில், பெரிய ஏவுதளங்கள் தேவைப்படும் என்றும் தற்போதைய ஸ்ரீஹரிகோட்டா இந்த ராக்கெட்களுக்கு போதுமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications