நடிகை டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் 'திடீர்' ரெய்டு - பின்னணி என்ன?
மும்பை: பாலிவுட் நடிகை டாப்ஸி வீடு மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு 'Phantom Films' எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே, விகாஸ், மது மந்தேனா ஆகிய நான்கு பேர் இணைந்து தொடங்கினர்.

இந்நிலையில், இந்நிறுவனம் வருமானம் வரி சரியாக செலுத்துவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் உள்ள அவர்களது வீடு, அலுவலகங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 20க்கு மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருவதாக தெரிகிறது.
அதேசமயம், தமிழில், 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களில் நடித்த டாப்ஸியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் இதுகுறித்து ட்வீட் செய்திருந்தனர்.
ரிஹானாவின் கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ட்வீட் செய்த நடிகை டாப்ஸி, "ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டாப்ஸி வீடு மற்றும் அலுவலகத்தில் தற்போது ரெய்டு நடந்து வருகிறது












Click it and Unblock the Notifications