உன் பேரு சையத் சைபுதீனா? கேட்டவுடன் சுட்டுக்கொன்ற ஆர்பிஎப் வீரர்! மதமே காரணம் என உறவினர்கள் கண்ணீர்
மும்பை: ஜெய்பூர் - மும்பை ரயிலில் பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஆர்பிஎப் பெயரை கேட்ட பிறகே சையதை கொலை செய்ததாக அவரது உறவினர் முஹம்மது வாஜித் பாஷா தெரிவித்து இருக்கிறார்.
கடந்த திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி ரயில் சென்றுகொண்டு இருந்தது. மும்பை ரயில் நிலையம் வந்தடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் அருகே இந்த ரயில் இந்த சென்று கொண்டு இருந்தது.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி எஸ்ஐ டீக்காராம் மீனாவையும், 3 ரயில் பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்ற பின்னர் சேத்தன் சிங், பி5 பெட்டிக்கு சென்று ஒரு பயணியை சுட்டுக் கொன்றார்.
அடுத்ததாக எஸ் 6 பெட்டிக்கு சென்று ஒரு பயணியையும் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே பேண்ட்ரி காரில் இருந்த பயணி ஒருவரையும் சேத்தன் சிங் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தார்.
ஆர்பிஎப் எஸ்-யை தவிர்த்து கொல்லப்பட்ட 3 ரயில் பயணிகளின் பெயர் அக்தர் அப்பாஸ் அலி (48), காதிர்பாய் முஹம்மது ஹுசைன் பன்புர்வாலா (58), சையது சைபுத்தீன் (43) என்பது தெரியவந்தது. இதில் சையது எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது. பி2 என்ற பெட்டியில் அமர்ந்து இருந்த சையதை நோக்கி ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங் சென்று இருக்கிறார்.
அவரது தலையில் ஆர்பிஎப் வீரர் சர்வீஸ் துப்பாக்கியை வைத்து இருக்கையில் இருந்து எழுந்து நடக்க சொல்லி மிரட்டியுள்ளார். சையது எழுந்தவுடன் அவரை பேண்ட்ரி கார் அருகே அழைத்து சென்று மற்ற பயணிகளின் கண் முன்பே தலையில் சுட்டுக்கொன்றார். ரத்த வெள்ளத்தில் பயணி சையத் கீழே சரிந்தார்.
அவரது உடல் அங்கே கிடக்கும்போதுதான், சேத்தன் சிங், "பாகிஸ்தான் தொடர்பில் இருந்தவர்களையே நான் கொலை செய்தேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட வேண்டும்." என்று பேசினார். இந்த வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட சையத் ஐதராபாத்தை சேர்ந்தவர். செல்போன் பழுதுபார்க்கும் கடையில் அவர் வேலைசெய்து வந்துள்ளார். அஜ்மீர் தர்காவுக்கு அவரும் கடை உரிமையாளரும் சென்றுவிட்டு திரும்பும் வழியில்தான் இந்த கொடூரம் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் சையதின் பெயரை கேட்ட பிறகே அவரை ஆர்பிஎப் வீரர் சேத்தன் சிங் சுட்டுக் கொன்றதாக அவருடன் பயணித்த உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கண்ணீர் மல்க பேசிய சைதின் மாமா, "இது ஒரு பயங்கரவாத தாக்குதல். சைதின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. அவருக்கு 6 மாத பெண் குழந்தை உட்பட 3 மகள்கள் உள்ளனர். ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மேலும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அவரது மகளின் கல்வி செலவை ஏற்று, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
இதனை பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்து இருக்கும் நம்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. ஜாஃபர் ஹுசைன் மெராஜ், மதத்தின் காரணமாக சையது சைபுதீனை அந்த ஆர்பிஎப் வீரர் சுட்டுக் கொலை செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications