விப் உத்தரவு பிறப்பித்துவிட்டால்.. பெரிய பிரச்சினை.. அஜித் பவாருக்கு அதிரடியாக செக் வைத்த சரத் பவார்
Recommended Video
மும்பை: சட்டசபையில், தேசியவாத காங்கிரஸ் சார்பில், அஜித் பவார் கொறடா உத்தரவு பிறப்பித்துவிட கூடாது என்பதில், சரத்பவார் தரப்பு மிக உறுதியாக உள்ளது.
என்சிபி கட்சியின், அஜித் பவார் தலைமையில் ஒரு சில எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், பட்னாவிஸ் அரசு பதவியேற்றதற்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸ் அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அஜித் பவார், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பித்து, பாஜகவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும் என கூறும் வாய்ப்பு இருந்ததை மறுக்க முடியாது.
உ.பி. முதல் கர்நாடகா வரை... 20 ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்குகள்!
இப்படி ஒரு உத்தரவை மீறி, பாஜக அரசு கவிழும் வகையில் வாக்களித்தால், அந்த எம்எல்ஏக்களை சபாநாயகரை வைத்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வைக்கவும் வாய்ப்பு இருந்தது. இதையெல்லாம் அறிந்துதான், இரு தினங்கள் முன்பாகவே, அஜித் பவாரிடமிருந்த என்சிபி சட்டசபை குழு தலைவர் பதவியை, பறித்தார் சரத் பவார்.
இதற்கு பதில், ஜெயந்த் பாட்டில் என்பவரை சட்டசபை குழு தலைவராக்கியுள்ளார். எனவே, இவர் யாருக்கு வாக்களிக்குமாறு தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு சொல்கிறாரோ, அந்த தரப்புக்கு, என்சிபி எம்எல்ஏக்கள் வாக்களித்தால் போதும்.
இருப்பினும், இத்தோடு விடவில்லை, சரத் பவார். ஜெயந்த் பாட்டில்தான் தங்கள் கட்சி, சட்டசபை குழு தலைவர் என்பதை, அதிகாரப்பூர்வமாக, சட்டசபை செயலாளரிடமும் இன்று முறைப்படி தெரிவித்துள்ளது என்சிபி கட்சி. இதன் மூலம், ஒருவேளை அஜித் பவார், பாஜக ஆட்சியை காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் அது செல்லத்தக்கது அல்ல என்ற நிலை உருவாகும்.