கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா
மும்பை: கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14 நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவில் கோல்ஹாபூரை சேர்ந்த பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா ரூ 1 கோடியை வென்றுள்ளார்.
கவுன் பனேகா குரோர்பதி எனும் நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார் . சீசன் 3 ஐ மட்டும் ஷாரூக்கான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 4 விடைகள் கொடுக்கப்பட்டு அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் சில கேள்வி கேட்கப்படும். அதில் மின்னல் வேகத்தில் பதில் அளிப்போருக்கே வாய்ப்பு அளிக்கப்படும். 20 கேள்விகள் கேட்கப்பட்டு ஒவ்வொரு கேள்வியின் சரியான விடைக்கும் இத்தனை ரூபாய் பரிசு வழங்கப்படும். 20 ஆவது கேள்விக்கு சரியான விடை கூறினால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.
கோவை டூ காஷ்மீர் 3000 கி.மீ! 2 நாட்களில் கடக்க திட்டம்.. நான்ஸ்டாப் ரைடு.. டிடிஎஃப் வாசன் ஷாக் தகவல்
1000 எபிசோடு
இந்த நிகழ்ச்சி கடந்த 2021 ஆம் ஆண்டில் 1000 ஆவது எபிசோடை கடந்தது. கடந்த 2000ஆம் ஆண்டில் ஹர்ஷவர்தன் நவதே என்பவர் ரூ 1 கோடி வெற்றி பெற்றார். அது போல் 2001 இல் விஜய் ரவுல் மற்றும் அருந்ததி, ரவி மோகன் சைனி ஆகியோர் ரூ 1 கோடியை வென்றனர்.
வென்றவர்கள்
கடந்த 2011 ஆம் ஆண்டு சுஷில் குமார் ரூ 5 கோடியை வென்றார். 2014 ஆம் ஆண்டு ரூ 7 கோடியை அசின் மற்றும் சர்தாக் நரூலா ஆகியோர் வென்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 14 ஆவது சீசன் அண்மையில் தொடங்கியது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த கவிதா சாவ்லா என்பவர் கலந்து கொண்டார். அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் குடும்பத் தலைவியாவார்.
ரூ 1 கோடிக்கான பதில்
இவர் ரூ 1 கோடியை வென்றுள்ளார். இந்த சீசனின் முதல் வெற்றியாளராக கவிதா விளங்குகிறார். ரூ 1 கோடிக்கான பதிலை அவர் சரியாக சொன்னதும் சந்தோஷம் தாங்க முடியாமல் உணர்ச்சிவயப்பட்டார். அவரை கட்டி அணைத்த அமிதாப் பச்சன் ஆறுதல் தெரிவித்தார். கவிதாவை அவரது மகனும் வாழ்த்தினார்.
ரூ 7.5 கோடி
அடுத்த கேள்விக்கு கவிதா பதில் அளித்தால் ரூ 7.5 கோடியை வெல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த கேள்விக்கு அவர் சரியான பதிலை அளிப்பாரா இல்லையா என்பது நிகழ்ச்சியில்தான் தெரியும். இதுகுறித்து கவிதா ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த சீசனில் ரூ 1 கோடி வென்ற முதல் போட்டியாளர் என்பது பெருமையாக இருக்கிறது. ரூ 7.5 கோடிக்கான கேள்வியையும் எதிர்நோக்கியுள்ளேன். நான் ரூ 1 கோடியை ஜெயிப்பேன் என யாருக்கும் தெரியாது என்றார்.