மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! 56 இடங்களில் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோப்ரி - பச்பகாடி தொகுதி ஸ்டார் தொகுதியாக இருக்கிறது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிட்ட தொகுதி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2009 ஆம் ஆண்டு முதல் 3 முறை இதே தொகுதியில் வெற்றி கண்டுவரும் ஏக்நாத் ஷிண்டே, இந்த முறையும் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில், 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஷிண்டே. அவர் தலைமையிலான சிவசேனா கட்சி 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 145, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 102, உத்தவ் தாக்கரே அணி 92, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தானே மாவட்டம் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிட்டார். கோப்ரி-பச்பகாடி சட்டமன்றத் தொகுதியில் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 3,39,526 வாக்காளர்கள் இடம்பெற்றனர். அவர்களில் 1,80,516 ஆண்கள், 1,58,989 பெண்கள் மற்றும் 21 மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், சிவசேனாவின் ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் காதிகோங்கர் சஞ்சய் பாண்டுரங்கை 88,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதற்கு முன்பு 2014 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே இந்த தொகுதியில் பாஜகவின் அட்வ் சந்தீப் லெலேவை 51,869 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரான நிலையில், சிவசேனா இரண்டாகப் பிரிந்துள்ளது. சட்டப்பூர்வமாக சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமை வகிக்கும் நிலையில், இந்த தேர்தலில் அவரது செல்வாக்கு வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
சிவசேனாவின் கோட்டையான கோப்ரி-பச்பகாடி தொகுதியில் இந்த முறை சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்டேவும், சிவசேவா (உத்தவ் தாக்கரே அணி) சார்பில் கேதார் திகேவும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், ஷிண்டே 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி - பச்பகாடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,053 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் ஷிண்டே. 4 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், 19,135 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார் ஷிண்டே.
தற்போது 10 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில், 45,979 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார் ஏக்நாத் ஷிண்டே. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஏக்நாத் ஷிண்டே,1,59,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேதார் பிரகாஷ் திகே, 38,343 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, 1,20,717 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவர் தலைமையிலான சிவசேனா கட்சி 57 இடங்களில் வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications